'தி கேரளா ஸ்டோரி' தமிழகத்தில் திரையிட எதிர்ப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கேரளாவை மையப்படுத்தி, 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் ஒரு இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்தப் படம் நாளை 5 ஆம் தேதி 5 மொழிகளில் திரைக்கு வருகிறது.
இந்தப்படத்தில் கேரள பெண்களை மத மாற்றம் செய்து, பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்து செயல்படுவது போல காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல தரப் பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மேற்படி திரைப்படத்தை வெளியிட்டால் அசம்பாவிதங்கள் நடக்கும் என்று உளவுத்துறை அரசுக்கு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இப்படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியே.
அப்படியிருக்க இந்த படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த ஒரு வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்து விட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு வழக்கு தாக்கலாகி, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி. எஸ். நரசிம்மா ஆகியோரைக்கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
இதுபற்றி நீதிபதிகள் கூறும் போது, “அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் கோரப்பட்டுள்ள நிவாரணங்களை, அதே சட்டத்தின் பிரிவு 226-ன் கீழ் ஐகோர்ட்டில் கோரலாம். அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க நாங்கள் விரும்பவில்லை.
வழக்குதாரர்கள் உரிய (கேரள) ஐகோர்ட்டை நாடலாம்” என குறிப்பிட்டனர். 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க மறுத்திருப்பதும், தமிழக அரசுக்கு உளவுத்துறை அனுப்பியிருக்கும் மெஸேஜூம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.