உயர்ரக போதை வஸ்து கோவை மாவட்ட போலிசாரால் பறிமுதல்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
துடியலூர் பகுதியில் உயர்ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர், அவற்றை பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான வெள்ளகிணர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளை வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜெயபால் மகன் அகில் (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 16000/- மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், கோவை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 207 நபர்கள் மீது 510 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 433.131 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டும், மேலும் உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 23 கிராம் எடையுள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.