சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி 132 பலி! முழு விவரம்!!

 

ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 சீனா அரசுக்கு சொந்தமான ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானமான எம்யு 5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 ஜி.எம்.டி.) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. 132 பேருடன் பயணித்த போது  குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர்.

 விபத்துக்குள்ளான போயிங் 737 ஜெட் விமானம் மலை காடுகளில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. அதாவது, வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.

 இந்நிலையில் அதில் பயணித்த 132 பேரும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

 இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.

 எம்யு 5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:11க்கு (05:11 ஜி.எம்.டி.) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மதியம் 03:05-க்கு குவாங்சோவை அடைந்திருக்க வேண்டும். அதற்குள் விபத்தில் சிக்கிக் கொண்டது.

 சீனா பாதுகாப்பான விமான விபத்துக்கு பெயர் பெற்றது. கடந்த 12 ஆண்டுகளில் பெரிய அளவில் விமான விபத்துக்கள் நடக்கவில்லை.

 சீனாவின் அரசுக்குச் சொந்தமாக ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன், ஏர் சீனா என மூன்று விமான நிறுவனங்கள் உள்ளன.  

   இந்த விபத்து தொடர்பாக, தீயணைப்பு அதிகாரி ஒருவர் 'குளோபல்' டைம்ஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்புப் படையினரை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம்.

  ஆனால், அந்த பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியை அடைய தாமதமானது. தீயணைப்புப் படையினர் நடந்தே அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்" என தெரிவித்தார்.

   மொத்தமாக 450 வன தீயணைப்புப்படையினர் விபத்து நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளதாக, சிஜிடிஎன் ஊடகம் தெரிவித்துள்ளது.

  விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் சுமார் ஆறரை ஆண்டுகளாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விமானத்தில் மொத்தமாக 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பு இருக்கைகள் ஆகும்.

 போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை!

இதனிடையே, விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  சமீப காலத்தில் நடந்த பெரிய விமான விபத்துகள்

 

2016

டிசம்பர் 25 அன்று, கருங்கடலில் ரஷ்ய ராணுவ விமானமான டியு-154 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் ரஷ்ய படையினருக்காக கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.

2018

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஏப்ரல் 11 அன்று, ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானக்குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர், ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.

2019

மார்ச் 10 அன்று, எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், அடிஸ் அபாபா பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 157 பேரும் இதில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

2020

 மே 22 அன்று, 91 பயணிகள் மற்றும் விமானக்குழுவை சேர்ந்த 8 பேருடன் பயணித்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர்பிழைத்தனர்.

2021

 கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.