150 மாணவர்களை கழிவறையில் அடைத்து சித்ரவதை செய்த பள்ளி நிர்வாகம்!

150 மாணவர்களை கழிவறையில் அடைத்து சித்ரவதை செய்த பள்ளி நிர்வாகம்!

ம.பா.கெஜராஜ்,

 அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களை ஒரு மணி நேரம் கழிவறையில் பூட்டிவைத்து சித்ரவதை செய்திருக்கிறது நிர்வாகம். அடித்து வெயிலிலும் நிற்க வைத்து கொடுமை செய்திருக்கிறார்கள்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், காவனூர் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த பள்ளியின் கழிவறை சுவற்றில் யாரோ சிலர் பென்சிலால் கிறுக்கியிருக்கிறார்கள். அதை அறிந்த கல்வி நிர்வாகம் மாணவர்களிடம் விசாரணை நடத்தி ஸ்கேலால் அடித்துள்ளனர்.

   இப்படி நடந்ததை அறிந்த பெற்றோர்கள் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

 இந்நிலையில் நேற்று டிச-20 ஆம் தேதி பள்ளிக்கூட கழிவறையில் கிறுக்கி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம் மாணாவர்களிடம் விசாரித்துவிட்டு அவர்களையே கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 ஆனால் அதற்கு மாணவர்கள் இணங்கவில்லை என்பதால், மாணவர்களை கழிவறையில் உள்ளே அடைத்து ஒரு           மணி நேரம் பூட்டிவைத்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்பு முதல் 9 வது வகுப்பு வரை பயிலும் சுமார் 150 மாணவர்களை இப்படி அடைத்து வைத்ததால் பல மாணவர்களுக்கு, வாந்தியும், சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் கழிவறையை திறந்து மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம் அவர்களை வெயிலில் நிற்கவைத்து அடித்திருக்கிறார்கள்.  இது  தொடர்பாக மாணவர்கள் சிலர் வீட்டில் கண்ணிரோடு முறையிட்டுள்ளனர்.

 அதே போல் பல மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த விவரம் தெரியவந்திருப்பதால் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் நியாயம் கேட்க முடிவெடுத்திருக்கிறார்கள். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அளிக்கவும் இருக்கிறார்கள்.