45 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள்சோதனை!சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு!!

G.Santhakumar,
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில் சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது. இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னையில் 5 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பட்டியலின்படி சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை போலீசார் சோதனை நடத்தி வருவது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.