நான்காவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!சாலையில் வரவேற்பு அளிக்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை!

உ.சசிகுமார்,
இந்த ஆண்டு துவங்கிய பின்னர் நான்காவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு இன்று மதியம் 2.45 மணிக்கு விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் செல்கிறார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு மாலை 5 மணி அளவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் "மீண்டும் மோடி சர்க்கார்" என்று வாசகம் கொண்ட பெரிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது
மோடிக்கு சாலையில் வரவேற்பு அளிக்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
பிரதமர் கல்பாக்கம் வரும் நிலையில் சுற்றியுள்ள மீனவ கிராமங்களான சட்ராஸ், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம் குப்பம், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கவனித்து வருகிறார். கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) நேரடி மேற்பார்வையில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த போலீஸார் மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் உட்பட மொத்தம் 15,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று தேர்வு என்பதால் சென்னை சிட்டியில் பல்வேறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.