கொக்கு போல் காத்திருக்கும் பாஜக! கடைசி நேரத்தில் பிடியை தளர்த்துமா அதிமுக!

ம.பா.கெஜராஜ்,
அதிமுக, பாஜகவுடன் 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணி வைத்திருந்தது. பின்னாளில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அக்கட்சியின் தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் நடைமுறை மாறிப்போனது. திமுக-வை எப்படி பாஜக விமர்சித்ததோ அதே பாணியில் கூட்டணியில் இருந்த அதிமுக வையும் விட்டுவைக்கவில்லை.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி கரைந்தது. ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் பாஜக வுக்கு அதிமுக கூட்டணி அவசியமாகிறது. திமுக தன்னுடைய கூட்டணியை வலுப்படுத்திக்கொண்டே போகிறது. தோழமை கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக நடத்தி அவர்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் அதிமுகவில், பாமக மற்றும் தேமுதி இணையும் முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பாஜக இல்லாவிட்டால் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று விடலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். அந்த கணக்கில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் செல்வாக்கு இல்லாத சில பலருடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளன.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் தொகுதியில் கிளைகளே இல்லாத ஜி.கே.வாசன், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வேலூரில் மட்டுமே ஆதரவாளர்கள் உள்ள ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் பகுதியில் மட்டும் தொண்டர்கள் பலம் கொண்ட பாரிவேந்தர், தென்மாவட்டங்களில் பட்டியலினத்தவர் ஆதரவு பெற்ற ஜான் பாண்டியன் என பலர் பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற கட்சிகளுடன் கூட்டு வைத்து தேர்தலை சந்திக்க விரும்பாத பாஜக, எப்படியும் அதிமுகவை தம்பால் இழுக்க பகிரத முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டே இருக்கிறது.
ஆனால் வடமாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதைப் போல், தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு காட்டும் பாரபட்சத்தை மக்கள் உணர்ந்து அதிருப்தியில் உள்ளதை அதிமுக நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மழை வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்காத மத்திய அரசின் பாரபட்சத்தை மனதில் கொண்டுள்ளது அதிமுக.
ஆகவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் மக்களின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதால் அக்கட்சி விரிக்கும் வலையில் அதிமுக சிக்காமல் உள்ளது. எப்படியும் அதிமுக வை பாஜக இழுத்து கூட்டணி வைத்துவிடும் என்பதாலேயே ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் ஓரம்கட்டி வைத்திருக்கிறதாம்.
அதிமுக வின் நடவடிக்கையை பார்கின்ற பொழுது கடைசி நேரத்தில் தன் பிடியை பாஜக வுக்காக தளர்த்தும் என்றே தெரிகிறது.
அப்படியேதும் நடந்தால் தமிழகத்தில் பிஃப்டி பிஃப்டி என்கிற கணக்கில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் வெல்லும் என்று சொல்லப்படுகிறது.