பத்ம ஸ்ரீ விருதை திரும்ப அளிக்க நடிகை கங்கனா ரணாவத் நிபந்தனை!! ஜனாதிபதிக்கு மகளிர் ஆணையம் கடிதம்!

ம.பா.கெஜராஜ்,
சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அவர்கள் வழங்கிய அந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் நடிகை கங்கனா ரணாவத்துக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என 'டெல்லி மகளிர் ஆணையத்தின்' தலைவர் ஸ்வாதி மாலிவால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“இந்தியா சுதந்திரம் அடைந்தது தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த கங்கனா ரணாவத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் பலமாக எழும்பி வருகின்றன.
அவருடைய இத்தகைய சர்ச்சை கருத்துக்களின் மூலம், நம் நாட்டின் மாபெரும் சுதந்திர போராட்ட வீரர்களாகிய மகாத்மா காந்தி, பகத் சிங் மற்றும் எண்ணில் அடங்கா பல்வேறு போராட்ட வீரர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்ட வெறுப்புணர்வு வெளிகாட்டப்பட்டுள்ளது.
நம் முன்னோர்களின் உயிர்த் தியாகத்தால் தான் நமது தேசம் சுதந்திரம் அடைந்தது என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.அவருடைய கருத்துக்கள் நாட்டு மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.மேலும், தேசத்துக்கு எதிராகவும் உள்ளன.
அவருக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள்.” என அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தியாகிகளை அவமரியாதை செய்தேனா? நிரூபித்தால் பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரணாவத், '1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது.
'' பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி' என்று பேசியிருந்தார்.
இதற்கு கண்டனங்கள் வலுக்கிறது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பண்டிட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"1947-ல் தங்கள் பிரிட்டிஷ் எஜமானர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ்ஸால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் அடிமைத்தனத்திற்கு எல்லையே இல்லை. அரை நூற்றாண்டு காலம் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கங்கனா ரணாவத் அவர்களில் ஒருவர். 2014-ல் உண்மையில் நமது நாட்டின் அடிமைத்தனம் திரும்பியது. இது தான் பாஜக அளித்துள்ள சுதந்திரம்.'' எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என பேசிய பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் 124கி இன் கீழ் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகை தெரிவித்திருப்பதாவது,
சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்ஷ்மிபாய் மற்றும் வீர் சாவர்க்கர் ஜி போன்ற தலைவர்களின் தியாகத்துடன், 1857-ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான முதல் கூட்டுப் போராட்டம் பற்றியும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
1857 போராட்டம் பற்றி எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்தப் போர் நடைபெற்றது. 1947-ல் யாராவது எனக்கு அப்படி ஒன்று நடந்ததாக தெரியப்படுத்தினால், விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்கிறேன்" என்கிறார்.
என்னைப் பொறுத்தவரை நேதாஜி தலைமையிலான ஐஎன்ஏ-வின் சிறு கலகத்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அதன்பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமராக இருந்திருக்கலாம்" என்று பேசியுள்ளார்.