திமுக வேட்பாளரை கிராமத்துக்குள் நுழையவிடாத மக்கள்! இயக்கியது யார்?

ம.பா.கெஜராஜ்,
வாக்கு சேகரிப்புக்கு சென்ற திமுக வேட்பாளரை கிராமத்துக்குள் நுழையவிடாமல் மக்கள் அவரை திருப்பி அனுப்பினார்கள். இதற்கு பின்னணியில் மாற்று கட்சி வேட்பாளரின் சூழ்ச்சி இருப்பதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட, பொய்கை, ராமபுரம், கன்னிகாபுரம் கிராமங்களில், வேலூ லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஓட்டு கேட்டு திமுகவினர் சென்றனர்.
அப்போது கன்னிகாபுரம் கிராம மக்கள் சாலையின் குறுக்கே, கட்டைகளை போட்டு, வேட்பாளர் கதிர்ஆனந்த், உள்ளிட்டோரை ஊருக்குள் ஓட்டு கேட்க வராவிடாமல் தடுத்தனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் அங்கிருந்த போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. காரிலிருந்து இறங்கிவந்த ஒன்றியக்குழு தலைவர் பாபு கிராமத்தினரை சமாதானம் செய்ய முயன்றார்.
சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியும் கிராம மக்கள் சமாதானமாகவில்லை.
'கன்னிகாபுரம் பகுதியில், அரசின் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. சேதமான சாலையை சீரமைக்க, பல முறை கோரிக்கை வைத்தும் நடக்கவில்லை. எனவே, சேதமான சாலையை சரிசெய்த பிறகு வாருங்கள். அதுவரை இப்பகுதிக்கு வரக்கூடாது' என, கிராம மக்கள் கூச்சல் போட்டனர்.
இதனால் வேட்பாளர் உள்ளிட்டோர் காரிலிருந்து கீழே இறங்க முடியாமல், காத்திருந்து விட்டு, மீண்டும் வந்த வழியே திரும்பினர்.
அந்த காரில் அமைச்சர் துரைமுருகனும் இருந்தார் என்று கூறப்படும் நிலையில், கிராம மக்களிடம், அமைச்சர் துரை முருகன், "இன்னும், ஆறு மாத காலத்திற்குள், உங்கள் பிரச்னை தீர்க்கப்படும்," என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சனையின் பின்னணியில் ஒரு முக்கிய வேட்பாளர் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் வென்றாக வேண்டும் என்கிற நோக்கத்தில் இப்படி குறுக்கு வழியை அவர் தரப்பு கையாண்டதாக நம்பப்படுகிறது.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளில் அங்குள்ள மலைக்கிராமங்கள் முதற்கொண்டு அனைத்து கிராமங்களிலும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டிருக்கிறது.
விடுபட்டுள்ள ஒரு சில கிராமங்களில் திட்டப்பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அணைக்கட்டு தொகுதியில் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு குறைவாக உள்ளதாம். அதை ஈடு செய்யவே இந்த குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தாராம்.
குறிப்பாக இந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கின்ற பொழுது கையில கல்லை எடுங்கள், கண்ணாடியை உடைங்க என்று ஒருத்தர் பின்னணியில் கத்திக்கொண்டே இருந்தார். பலமுறை இப்படி கூச்சலிட்டு கிராமமக்களை அந்த நபர் தூண்டிவிடுகிறார். ஆனால் அம்மக்கள் அந்த நபர் சொன்னதை காது கொடுத்து கேட்கவில்லை.
இதனால் அங்கு வன்முறை தவிர்க்கப்பட்டது.