திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட ஊரிசு கல்லூரி மாணாக்கள்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட ஊரிசு கல்லூரி மாணாக்கள்!

ஜி.கே.சேகரன்,

 விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வு முடிவு வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி சேர்க்காட்டில் உள்ள  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கல்லூரி மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டனர்.

 வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டில் செயல்பட்டு வருகிறது அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இதற்கும் முறைகேடுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

 இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 79 உறுப்பு கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.

 இந்நிலையில் முதல் பருவ தேர்வுகள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் கடந்து சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. 

  இதில் சுமார் 3200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பூஜ்ஜியம் அளவில் மதிப்பெண் வந்ததாகவும், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இதனை அடுத்து வேலூரில் உள்ள ஊரிசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி மற்றும் திருவலம் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும், தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

   இதனை அடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  அதில் பல்கலைக்கழக கணினி கோடிங் சீட்டில் விதித்துள்ள விதிமுறைகளை சரியாக பேராசிரியர்கள் பின்பற்றாததாலும், அஜாகரத்தையாக செயல்பட்டதாலும் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளது. மேலும் இவ்வாறு நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

 தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்த திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் ஆண்டுத்தோறும் குளறுபடிகள் தீருவதில்லை மாறாக ஒவ்வொரு ஆண்டும் புதிது புதியதாக குளறுபடிகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது இதனை துணை வேந்தர் முதற்கொண்டு யாரும் சீரமைத்து சரி செய்ய முன் வருவதில்லை எனவே தமிழக அரசு இனி வரும் காலங்களிலாவது மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வண்ணம் குளறுபடிகள் இல்லாமல் விடைத்தாள் திருத்தம் மதிப்பெண் பட்டியல் வெளியீடு தேர்வு முடிவுகள் வெளியீடுகள் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.

செய்யுவாங்களா?