மெத்தப்பெட்டமைன் போதை பொருளை கடத்தியவனுடன் பயணித்த புலனாய்வுத்துறையினர்! தப்பவிடாமல் மடக்கிபிடித்தனர்!

Ma.ba.Gajaraj,
ரகசிய தகவலின் அடிப்படையில், பொதிகை ரயிலில் பயணித்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர், அதே ரயிலில் மெத்தப்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்டுபிடித்து ஒருவரை கைது செய்திருக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரை ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணிக்கு நேற்று வந்தது. அப்போது ஒருவர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் மடக்கி விசாரித்ததுடன், அவர் வைத்திருந்த இரண்டு பேக்குகளை ஆய்வு செய்தபோது, பொட்டலங்கள் வடிவில் போதைப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிரமாக விசாரித்த போது, அவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியிலுள்ள கண்ணதாசன் நகரிலுள்ள அபிராமி அவென்யூ பகுதியைச் சேர்ந்த இனியாஸ் என்பவரின் மகன் பிள்ளமண்ட் பிரகாஷ் என தெரிந்தது.
அவரது இரண்டு பேக்கில் தலா 15 பொட்டலங்களாக போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் ரசாயன பவுடர்கள் என சுமார் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
பகீர் தகவல்கள்
"கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் கடல் பகுதியில் ஈரானிலிருந்து கப்பல் மூலம் கடத்தப்பட்டு வந்த சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 150 கிலோவிற்கு மேலாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளும் இருந்தது.
இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இக்கும்பலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடுகின்றனர்.
அதே போல் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மதுரை கே.கே.நகர் பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அவரது தகவலின் பேரில் சென்னையைச் சேர்ந்த அருண், அன்பு ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.
அப்படியிருக்க மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் (டிஆர்ஐ) கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை- செங்கோட்டை ரயிலில் பயணித்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் மதுரை யூனிட் அதிகாரிகள் அதே ரயிலில் போதைப்பொருள் கடத்திய பிள்ளமண்ட் பிரகாஷை மடக்கினர்.
அவரிடம் இருந்து கைப்பற்றிய 30 கிலோ போதைப்பொருள் சர்வதேச சந்தையின் மதிப்பு ரூ. 50 கோடிக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மதுரை ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் வைத்து அவர் விசாரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருள் ராமேஸ்வரம் வழியாக இலங்கை கடத்த முயற்சித்து இருந்ததாக கூறப்படுகிறது.
பிடிபட்ட பிள்ளமண்ட் பிரகாஷிடம் அதிகாரிகள் விசாரித்த போது சென்னையில் உள்ள ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக அறியப்பட்டது. அந்த வகையில் சென்னை கொடுங்கையூருக்கு சென்னை டீம் விரைந்த போது குறிப்பிட்ட இடத்தின் குப்பை தொட்டியில் போதை பொருளை ஒரு பெண்மணி வீசியதாக அவரை பிடித்தனரா.
பின்னர் அந்த பெண் அளித்த தகவலின் பேரில் ஆய்வு நடத்தியதில், குப்பை தொட்டியில் வீசப்பட்ட போதை பொருட்கள், கொடைங்கையூர் குப்பை கிடங்குக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு குப்பையோடு குப்பையாக போடப்பட்டதை கண்டுபிடித்தனராம்.