நெல் கொள்முதல் நிலையங்களில் மெகா முறைகேடு: கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

நெல் கொள்முதல் நிலையங்களில் மெகா முறைகேடு: கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

   ஜே.ஜே.எம். ரபிக் ராஜா,

தேனி மாவட்டத்தில் அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து நெல்லினை நேரடி கொள்முதல் செய்து வருகின்றது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல்லுக்கு மூடை ஒன்றுக்கு ரூபாய் 20 வரை கட்டாய வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   இந்த தொகையில் மண்டல மேலாளருக்கு சம விகிதத்தில் பங்கு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 சுமை தூக்குவோருக்கு சம்பளம் கொடுப்பதிலும் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

 அரசு நேரடி கொள் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் பணியாளர்களை ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா 12 நபர்கள் வீதம் அரசு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ள போதிலும், இவர்களை சுமை தூக்கும் தொழிலாளர்களாக பயன்படுத்துவதில்லை.

 ஆனால் அந்தந்த பகுதியில் உள்ள நபர்களை வைத்துக் கொண்டு சுமை தூக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மூலமாகவே விவசாயிகளிடம் லஞ்ச பணம் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

   மேலும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் பணிபுரியும் சுமைதூக்கும் பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன சீருடை அணிவது கிடையாது.

  மேலும்  மேலாளர் மற்றும் ஒப்பந்த கால சுமை பணியாளர்களது வருகை பதிவேடு விபரங்களை கடைபிடிப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

  தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவரிடமும் கையூட்டு பெறக் கூடாது என்று அறிவிப்பானை வெளியிட்டும், பல நிலையங்களில் விழிப்புணர்வு விளம்பர பலகை, அறிவிப்புப் பலகை , புகார் பெட்டி கூட வைக்க வில்லை.

   ஒரு சில இடங்களில் அறிவிப்பு பலகையை பெயரளவில் ஒட்டி வைக்கப்பட்டு கண்துடைப்பாக காட்டப்பட்டு வருகின்றது. மதுரையை மையமாகக் கொண்ட First Choice out sourceing  மூலம் ஒப்பந்த அடிப்படையில் மூடை 1'க்கு ரூ 10 ரூபாய் வீதம் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடித்தம் செய்து லாரிகளில் ஏற்றி, அடுக்கம் செய்யும் வரையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தற்போது எந்த ஒரு நிலையத்திலும் இவை கடைபிடிக்கப்படுவதில்லை. விவசாயிகளிடம் சுமை இருக்கும் தொழிலாளர்கள் மூலம் பெறப்படும் லஞ்ச பணங்களை எவரேனும் வெளியில் சொன்னால் அவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் சுமை பணியாளர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிகின்றது.

 இதனால் விவசாயிகள் பயந்து உண்மையை வெளியில் சொல்ல முடியாத நிலையில் தவிர்த்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

 கடந்த வாரம் ஒரு விவசாயி மாவட்ட நிர்வாகத்திற்கு முறைகேடு சம்பந்தமாக தகவல் தெரிவித்த நிலையில் பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்து கள ஆய்வு மேற்கொண்டும், விவசாயிகளிடம் நேரடியாக கையூட்டு பெறப்படுகின்றதா? என்ற விபரத்தினை அறிந்து கையூட்டு பெறப்படும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.