1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் அழிக்கப்பட்ட “படா போதை” பொருட்கள்!

1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் அழிக்கப்பட்ட “படா போதை” பொருட்கள்!

 ஜி.சாந்தகுமார்,

  ஒருங்கிணைந்த  சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிக்க போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 உரிய மாதிரிகள், புகைப் படங்கள் எடுக்கப்பட்ட பின்னர் நிலுவையிலுள்ள 30 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 811 கிலோ 650 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 14 கிலோ 830 கிராம் கெட்டமைன் போதை பொருட்கள் என மொத்தம் 826 கிலோ 480 கிராம் போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது.

 மேலும், போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து மேல்முறையீட்டு காலம் முடிந்த 27 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 19.360 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது.

   அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், முன்னிலையில், மொத்தம் 57 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 845.83 கிலோ போதைப் பொருட்கள், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

   அழிக்கப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும். கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி 68 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் ஆகிய போதைப் பொருட்கள் நீதிமன்றங்கள் ஆணைப்படி உத்தரவுப்பெற்று காவல் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டது நினைவுகூற தக்கதாகும்.