பத்தாவது பெருசா? எம்பிபிஎஸ் பெருசா? சல்யூட்க்காக போலீஸை வறுத்தெடுத்த டாக்டர்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
சல்யூட்க்காக போலீஸை வறுத்தெடுத்த டாக்டரின் செயல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி சேர்க்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கிழக்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் (ஷேடோ டூட்டியில்) ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் வார்டுக்குள் மருத்துவர் வாசன் வந்தார்.
அப்போது, அங்கு சிறை கைதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸை பார்த்து
என்னை தெரியலையா? நான் வந்ததும் என்னைப் பார்த்து சல்யூட் அடிக்க தோணலையா? டாக்டர் பெருசா?போலீஸ் பெருசா?
பத்தாம் கிளாஸ் பெருசா? எம்.பி.பி.எஸ். பெருசா என எகிறினார்.
சார், ஒரு இடம் இரண்டு இடம் டூட்டி பார்த்தால் தெரியும். ஓராயிரம் இடத்தில் டூட்டி பார்த்ததால் எப்படி பளிச்சுனு ஞாபகத்துக்கு வரும் என டாக்டரிடம் அந்த போலீஸ் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தரக்குறைவான வார்த்தையில் பேசினாராம் டாக்டர்.
சார், நானும் எம்.காம் படிச்சிட்டு தான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கேன். போலீஸை ரொம்ப கேவலமா பேசாதீங்க. எங்களோட உயர் அதிகாரிகள் வந்தால் சல்யூட் அடிக்க தான் ட்ரெய்னிங்கில் சொல்லி தந்துள்ளார்கள். நீங்கள் டாக்டர்ன்னு எனக்கு தெரியாது.
உங்ககிட்ட இப்போது டாக்டர் அடையாள அட்டையும் பார்வையில் படும்படி இல்லை. ஒயிட் கோட்டும் போடவில்லை. ஸ்டெதெஸ்கோப்பும் கையில் இல்லை பிறகு எப்படி நான் டாக்டர் என்று அறிவேன்.
எங்க இன்ஸ்பெக்டர் ஐயா, எங்க டி.எஸ்.பி. ஐயா, எங்க எஸ்.பி. ஐயா சிவில் டிரஸ்ஸில் வந்தால் உங்களுக்கு எப்படி அடையாளம் தெரியும். நீங்கள் அவர்களுக்கு சல்யூட் அடிப்பீங்களா. நீங்கள் ஒரு அரசு ஊழியர். நானும் ஒரு அரசு ஊழியர் என பதிலடி தந்தார் அந்த போலீஸ்.
இந்த விவகாரம் சில நிமிடங்களில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றதும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலையிட்டு டூட்டியில் இருந்த போலீசை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர்.
அத்தோடு விவகாரம் முடிந்தது என கருதிய நிலையில், என்ன காரணமோ தெரியவில்லை, டாக்டரிடம் ஒரு பெட்டிஷனை வாங்கி டூட்டி பார்த்த போலீஸ் மீது சி.எஸ்.ஆர். போட போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனராம்.
இதனை அறிந்த சக போலீசார் மனம் குமுறி, ஒரு சல்யூட்க்காக இப்படியா செய்வாங்க என்கிறார்கள்.