புளியந்தோப்பு பெண்ணிடம் அறைவாங்கிய கண்டக்டர்!

புளியந்தோப்பு பெண்ணிடம் அறைவாங்கிய கண்டக்டர்!

 ஜி.சாந்தகுமார்,

   சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 30). இவர், மயிலாப்பூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பஸ் நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பஸ் தடம் எண் 42 ஏ ஓடிச்சென்று ஏறினார்.

   அதற்கு பஸ் கண்டக்டர் செல்வக்குமார் (42) அனிதாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளம்பெண், கண்டக்டரை திட்டியபடியே பஸ்சில் பயணம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் செல்வக்குமார், பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் அந்த பெண்ணை பஸ்சை விட்டு கீழே இறங்கும்படி கூறினார்.

  இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் திடீரென கையால் கண்டக்டர் செல்வக்குமாரை தாக்கினார். பதிலுக்கு அவரும் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்து இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

   இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்டக்டர் மற்றும் இளம்பெண் என 2 பேரிடமும் புகாரை பெற்றனர்.