கள்ளக்குறிச்சி கிலி:- விதிகளை மீறிய திருப்பத்தூர் - திருப்பூர் தனியார் பள்ளிகள்!
கு.அசோக்,
நேற்று கள்ளகுறிச்சி தனியார் பள்ளியில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக திருப்பத்தூர் மற்றும் திருப்பூரில் சில பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் உத்தரவை மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்து இருந்தது.
அப்படியிருக்க இன்று திருப்பத்தூரில் ஒரு சில மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் ஒரு சில மெட்ரிக் பள்ளிகளுக்கு கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பந்தமாக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளன. அதில் வேளாங்கண்ணி, நாராயணி, குட்வில் உள்ளிட்ட ஒரு சில பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளது. பாரதி வித்யாபவன், அட்வைதா மெட்ரிகுலேஷன், யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி, சென்சுரி பவுன்டேஷன், பெம் ஸ்கூல், ஸ்பிரிங் மவுன்ட் உள்ளிட்ட பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளது.
பாரதி வித்யா பவன் பள்ளி சார்பில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மொபைல் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் காரணத்தை அறிவிக்காமல், பள்ளி இன்று விடுமுறை தெரிவித்துள்ளது.
இதேபோல் சில பள்ளிகள் பெற்றோர்களின் மொபைல் எண்ணுக்கு பள்ளிகள் விடுமுறை என குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்குகிறது. தனியார் பள்ளிகள் விடுமுறை குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிக்கும் தெரியப்படுத்தி உள்ளோம்.
விடுமுறை அறிவித்துள்ள தனியார் பள்ளிகள் இன்று மட்டும் விடுமுறையை அறிவித்துள்ளதா அல்லது தொடர் விடுமுறையில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து இன்று தெரிந்துவிடும். மேலும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் விதிகளை மீறி உள்ள தனியார் பள்ளிகள் மீது மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் வழிகாட்டுதலோடு நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்.