வாணியம்பாடி அருகே வீடு வழங்கும் திட்டத்துக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரி!

கு.அசோக்,
வாணியம்பாடி அருகே வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் மத்திய அரசின் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் வீடு வழங்க பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பெறப்பட்ட மனுக்களில் 289 பயனாளிகள் தேர்வு செய்து வீடுகளை கட்ட பணியானை வழங்கப்பட்டது.
இந்நிலையில் காமராஜர் நகர் பகுதியில் குடிசை வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரபீக் என்பவரும் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் வீடு பெற விண்ணப்பம் செய்து இவருக்கு இந்த திட்டத்தில் வீடு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் ஊராட்சி நிர்வாகத்திடம் வீடு கட்ட பணியானை கேட்டபோது ஊராட்சி கிளார்க் ரூ.20 ஆயிரம் பணத்தையும் லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் அதே ஊராட்சியில் தற்காலிக பணியில் உள்ள தண்ணீர் பம்ப் ஆப்ரேட்டர் பழனி என்பவர் நான் தான் வீடு கட்டி தருவேன் அதற்கு ரூ.50 ஆயிரம் பணமும் வீடு கட்ட மணல், கதவு, ஜல்லி ஆகியவை கொடுத்து விட வேண்டும் என்று மிரட்டியதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் பயனாளியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பயனாளி ரபீக் மாவட்ட ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.புகார் மனுவை பெற்ற அதிகாரிகள் விசாரணை செய்து வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிகள் இயக்குநர் 20.02.2020 ஆண்டு வருவாய் கோட்டாட்சியருக்கு பதில் மனு அனுப்பியுள்ளார்.
மேற்படி இந்த பதில் மனு அளித்து 2 ஆண்டுகள் ஆகியும் இது வரை வீடுகட்ட பணியானை வழங்காமல் தொடர்ந்து தன்னை அலைக்கழித்து வருவதாகவும்,கூலி வேலை செய்து மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசிக்கும் என்னால் அரசு வழங்கும் வீட்டிற்கு மேலும் லஞ்சம் பணம் கொடுக்க தன்னிடம் பணவசதி இல்லை என்றும்,உடனடியாக வீடு கட்ட பணியானை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.