இறைச்சி சாப்பிட்டதால் இமாச்சலம் சரிந்ததாம்! அடேய் நீங்க சாமியாரா? ஐஐடி இயக்குநரா?

உ.சசிகுமார்,
இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதல்வர் சுக்விந்தர் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
போதாக்குறைக்கு பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் வரை பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இல்லாத பேரழிவை இமாச்சல பிரதேசம் சந்தித்துள்ளதாகவும், நிலச்சரிவின் காரணமாக பெரிய கட்டடங்கள் சரிந்து விழும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் இமாச்சல பிரதேச பேரிடருக்கு டுபாக்கூர் காரணத்தை ஐஐடி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டியில் உள்ள ஐஐடியில், லக்ஷ்மிந்தர் பெகேரா என்பவர் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ஆண்டு தனது நண்பர் வீட்டில் உள்ள தீய ஆவிகளை புனித மந்திரங்களை கூறி விரட்டுவதாக பேய் ஓட்ட்டியதாக இவர் பெயர் தலைப்புச் செய்திகளில் வந்தவர். இந்நிலையில் தற்போது அவர், மாணவர்கள் மத்தியில் பேசும் போது "சுற்றுச் சூழலுடன் விலங்குகள் ஒரு கூட்டு வாழ்வை கொண்டுள்ளது. அப்பாவி விலங்குகளை உணவுக்காக வெட்டிக் கொல்கிறார்கள். இதனால் தான் இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள், பெரு வெள்ளம் என அடிக்கடி பேரழிவுகள் ஏற்படுகின்றன.
மக்கள் இறைச்சி சாப்பிடுவதுதான் இதற்கு காரணம். விலங்குகளை நாம் கொடுமைப் படுத்துவதாலும் ஏற்படும் விளைவுகளே இவை" என்று கூறுகிறார். மேலும், இறைச்சி சாப்பிடுபவர்கள் நல்ல மனிதர்களே இல்லை என்ற அவர், நல்ல மனிதர்களாக மாற நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொன்ன இறைச்சி சாப்பிட மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் ஒரு ஐஐடி இயக்குனர் இவ்வாறு முட்டாள்தனமாக பேசுவது வியப்பளிக்கிறது என பதிவிட்டு வருகின்றனர்.