அமித்ஷா போன் நெம்பரை வைத்து மோசடி! இரட்டை இலை சுகேஷ் பற்றி அமலாக்கத்துறை பகீர்!

அமித்ஷா போன் நெம்பரை வைத்து மோசடி! இரட்டை இலை சுகேஷ் பற்றி அமலாக்கத்துறை பகீர்!

 ம.பா.கெஜராஜ்,

   சுகேஷ் சந்திரசேகர்... இந்த பெயர் இரட்டை இலை வழக்கில் தமிழகத்தில் பெரிதும் அடிப்பட்டது ஆகும். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர்.  இவர்,இந்திய அளவில் தமக்கு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்தார் என பல்வேறு புகார்கள் உள்ளன.

 இந்நிலையில் அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

 சுகேஷ் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தன் பேரில்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

  இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் கைது செய்யப்பட்ட சுகேஷ்,சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 இந்நிலையில் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது இடம் பெற்று இருந்தது.

 மேற்படி அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிகையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுகேஷ் சந்திரசேகர் முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021-ல் ஜாக்குலின் பெர்னாண்டசை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றார். ஆனால் அவர் யார் தெரியாததால் ஜாக்குலின் அந்த அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.

 பின்னர் அவரது ஒப்பனை கலைஞர் ஷானுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அரசாங்கத்தில் மிக முக்கியமான நபர் என்பதால் சேகர் என்ற சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

  இந்த அழைப்பு அமித்ஷாவின் அலுவலகத்தில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அது ஒரு மோசடியான ஏமாற்று அழைப்பு என்று கண்டறியப்பட்டது.

  சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுடன் நட்பு ஏற்பட அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளார். அதன்பிறகே அவரது ஒப்பனை கலைஞர் சுகேஷ் சந்திரசேகரின் மொபைல் நம்பரை ஜாக்குலினுடன் பகிர்ந்துள்ளார்.

  அதன் பிறகுதான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் தனது இயற் பெயரை மறைத்து சேகர் ரத்னா வேலா என்று அறிமுகப்படுத்தி இருந்தார்.

  நடிகை ஜாக்குலின் குடும்பத்தினருக்கு சுகேஷ் சந்திரசேகர் கோடி கோடியாக பரிசளித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் அவரது சகோதரிக்கு கடனாக பணம் அளித்துள்ளார். மேலும் சொகுசு கார்களையும் கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 முக்கியமாக  சுகேஷ் தனது 17-வது வயதில் இருந்தே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளார் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் சொல்கிறார்கள்.