போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வாத்தியாராக மாறிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமுச்சி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள தங்களது வீடுகளை இடிக்க கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், பொதுமக்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரை மணி நேரம் பாடமெடுத்தார்.
நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து அரை மணிநேரத்திற்கும் அதிகமாக பொதுமக்களுக்கு ஆசிரியராக மாறி வகுப்பெடுத்தார்.
மேலும் வீடுகளை இழக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் நிச்சயம் வீட்டுமனைப்பட்டாவோடு வீடு கட்டவும் உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அப்பகுதி மக்களுடன் பேசிய மாவட்ட ஆட்சியர் வறுமை நிலை பாராது அனைவரும் தங்கள் பிள்ளைகளை நிச்சயம் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த செயல்பாட்டால் மெய்சிலிர்த்த மக்கள் போராட்டத்தை கைவிட்டு மன மகிழ்ச்சியோடு ஆட்சியருக்கு நன்றி சொல்லி விடைப்பெற்றனர்.
இவரல்லவா ஆட்சியர்.