இன்ஸ்டாகிராம் ரீல்சில் ஆயுதங்களுடன் போஸ் கொடுத்த பெண்! வலை வீசும் போலீஸ் l

இன்ஸ்டாகிராம் ரீல்சில் ஆயுதங்களுடன் போஸ் கொடுத்த பெண்! வலை வீசும் போலீஸ் l

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

கோவையை சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து அவரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்..

கோவை மாநகரில் கடந்த மாதம்  12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில் இருவேறு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது.கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். 

அதே சமயம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் வீடியோவில், கோவை மாநகரில் ரவுடிகளுக்கு எதிரான  நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் சில தினங்களுக்கு முன் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும்  சமூக வலைத்தளங்கள் மூலமாக குழுவை உருவாக்கி சண்டையிட்டுக் கொள்வது ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

மேலும் இவர்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள், இவர்களுடன் நெருக்கமாக பழகக் கூடிய இளைஞர்கள் ஆகியோரின் அடையாளம் கண்டு வருகிறோம். இவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 

அதே சமயம் ஒரு சில இளம்பெண்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார். சிலர் தலைமறைவாக உள்ளனர் என கூறியுள்ள அவர் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூடிய விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த தமன்னா என்ற இழந்தேன் பயங்கர ஆயுதங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.