அரசு ஊழியர்கள் அரசு அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது! ஆசிரியர்கள் அதிரடி கைது!

ம.பா.கெஜராஜ்,
"சம வேலைக்கு சம ஊதியம்" என்கிற கோரிக்கையுடன் இடைநிலை ஆசிரியர்களும், நிரந்தர பணி வேண்டி தற்காலிக ஆசிரியர்களும் சென்ற ஒரு வாரமாக போராடி வருகின்றனர்.
அவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளபேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் (டிபிஐ வளாகத்தில்) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு டிபிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். டிபிஐ வளாகத்துக்குள் அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என அரசு தரப்புடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனளிக்கவில்லை.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சர் ஸ்டாலினுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
"இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகள் 3 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டு அறிக்ககை சமர்ப்பிக்கப்படும்
171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வருவது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்."என்று அமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் தங்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக ஆசிரியர்கள் இரவோடு இரவாக அறிவித்தனர்.
அப்படியிருக்க பொழுதுவிடிந்ததும் டிபிஐ வளாகத்திற்குள் வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் கோரலாம், அல்லது ஜனநாயக முறைபடி போராட்டம் நடத்தலாம். அப்படிப்பட்ட போராட்டமானது அரசு கட்டிடங்களுக்குள் நடத்தக்கூடாது என்று தடை போட வேண்டும். அரசு சம்பளம் பெறும் ஓழியர்களுக்கு எத்தனையோ சலுகைகளை வாரி வழங்கும் அரசாங்கம், அரசாங்க அலுவலக வளாகத்தில் போராடவும் சலுகை அளிக்கக்கூடாது.
அப்படியானால் அரசாங்கத்துக்கு பல்வேறு கோரிக்கை விடுக்கும் அமைப்புகளும் மேற்படி அனுமதி கேட்கக்கூடும் அல்லவா?