ஆபத்தான எலக்ட்ரிக் டெட்டனேட்டர் - ஜெலட்டின் பறிமுதல்!

ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,
காரமடை பகுதியில் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய பகுதிகளில் சார்பு ஆய்வாளர் திரு.சுல்தான் இப்ராஹிம் மற்றும் தலைமை காவலர் திரு.சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நான்கு நபர்களை சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர்.
அதில் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(23), ஆனந்த்(25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார்(41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார்(43) என்றும், அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் 26 கட்டுகள் கூடிய மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி அவர்களிடம் விசாரிக்க சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், மேற்படி ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடி பொருளை எவ்வித உரிமைமுமின்றி பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்து வருவதாக தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து அவரை விசாரிக்க, அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது வேலை நடந்து வரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேற்படி வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோர்களிடமிருந்து வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தகவல் தெரிந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி நபர்களை விசாரணை செய்தார்.
மேலும் மேற்படி நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டு, இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.