ஓட்டலில் மீன் வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பலி! அலட்சிய போக்கில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்!

ஓட்டலில் மீன் வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பலி! அலட்சிய போக்கில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்!

ஜி.கே.சேகரன்

 ஓட்டல் கடையிலிருந்து வாங்கப்பட்ட பொறித்த மீனை சாப்பிட்ட குழந்தைகள் பாலியானார்கள். இவ்வளவு நடந்த பின்னரும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அலட்சிய போக்கில் உள்ளனர்.

 வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர்(34)-சுரேயா தம்பதியினர். அன்சர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், சுரேயா வீட்டிலேயே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.  

இவர்களுக்கு ஆப்ரீன் என்ற 4 வயது பெண் குழந்தையும், அசேன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தந்தை அன்சர் நேற்று இரவு வீட்டுக்கு வரும் போது சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் எண்ணையில் பொறித்த மீன் துண்டுகளை வாங்கி வந்துள்ளார்.

அதை தனது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளது. பயந்து போன பெற்றோர் செய்வதறியாது அருகில் உள்ள மசூதிக்கு குழந்தைகளை அழைத்து சென்று மத்திரித்து வந்துள்ளனர்.

காலையில் உடல் நிலை மோசமாகவே அப்பகுதியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு டானிக் பாட்டில், ஒரு மாத்திரையை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.

 இதை  உட்கொண்டவுடன் அடுத்த 10 நிமிடத்தில் குழந்தைகள் சுயநினைவை இழந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அவசர அவசரமாக வேலூர் பழைய அரசு பெண்ட்லெட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 அங்கு இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளும் ஏற்க்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

 இதனையடுத்து உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம் குறித்து அரசு மருத்துவர் கூறுகையில், குழந்தைகளுக்கு 2 நாட்களாகவே வயிற்றுப்போக்கு இருந்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.

   மேலும் நேற்று இரவு மீன் சாப்பிட்டதாகவும் அதனால் வாந்தி ஏற்பட்டதால் அவர்களே அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் மருந்தை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

    இருந்தபோதும் தெளிவாக அவர்கள் எதையும் குறிப்பிடவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இரண்டு குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

  குழந்தைகள் உயிரிழந்த பகுதியான கஸ்பா பஜார் தெருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்ப சுகாதார நிலையை செவிலியர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் மாதிரிகளை எடுத்து சோதனை. மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் அல்லிகுளம் பகுதியில் மீன் சாப்பிட்ட முதியவரும் சிறுவனும் பலியான நிலையில் தற்போது மீன் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளது.

 இந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு:- ஓட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகள் சுத்தம் சுகாதாரத்தோடு சமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்தி வழிகாட்டிட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர்.

 அவர்கள் பல உணவு விடுதிகளிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் உள்ளார்கள்.

 சமீபத்தில் கூட மக்கான் சிக்னல் அருகே ஒரு பிரியாணி கடையில் சமையல் எண்ணெய்க்கு பதிலாக மாட்டுக் கொழுப்பை பயன்படுத்தி சமைக்கிறார்கள் என்று புகார் எழுந்தது.

 அது குறித்து வெட்டி முறிப்பதாக கிளம்பிய சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஏனோ தெரியவில்லை அதை கண்டு கொள்ளவேயில்லை. அதன் காரணமாக கஸ்பா பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அங்கு பிரியாணி சாப்பிட்டு அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கிறது.

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கெட்டு போன கோழி இறைச்சியை உண்ட சிறுமி இறந்த சம்பவத்தில் கைது நடவடிக்கை போன்றவை இருந்தன. ஆனால் வேலூரில் யாருக்கு என்ன நடந்தாலும் கல்லா ரொம்பினால் போதும் என்று  அலுவலர்கள் இருப்பது வேதனையே.