ஜெனரல் பிபின் ராவத் சதியால் கொல்லப்பட்டாரா? ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி கைப்பற்றப்பட்டது!

ம.பா.கெஜராஜ்,

 இந்திய இராணுவ ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாபடர் விமான விபத்து  தொடர்பான கறுப்பு பெட்டி கைப்பற்றப்பட்டது!

 கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படைத் தளபதி உள்பட 14 பேர் பயணித்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது.

 ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது வானில் கடுமையான மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 இருப்பினும் மேற்படி ரக ஹெலிகாப்டர் பனி மூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து இயக்கப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தை கடந்தது.

 குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சென்ற போதும் பனிமூட்டமாகவே காணப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் தள்ளாடியுள்ளது. அப்போது திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் விமானத்தின் ஒரு இறக்கை மோதியது. ஹெலிகாப்டரின் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்தது.

   இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மீட்க ஓடி வந்துள்ளனர். ஆனால் ஹெலிகாப்டரிலிருந்து வெடி சத்தம் வந்ததால் வெடி குண்டு பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அதன் அருகே செல்ல பயந்து உடனடியாக தீயணைப்புதுறை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

  இந்நிலையில் முப்படை தளபதி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உடனடியாக விமானப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த காட்டேரி பகுதிக்கு விரைந்தனர். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

  வழக்கமாக இந்த ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி புறப்பட்ட இந்த எம்.ஐ.17 வி.5 ரக ஹெலிகாப்டரும் பரிசோதிக்கப்பட்டதாக ஆவணங்கள் உள்ளன. இருந்த போதும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.

  இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடமும் விமானப்படையினர் விசாரித்தனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? பனி மூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஹெலிகாப்டரில் ஏதாவது கோளாறு இருந்ததா? சதியாக இருக்கலாமா என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

   உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக சில முக்கிய பணிகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

 இதற்கெல்லாம் ஹெலிகாப்டரில் இருந்த கறுப்பு பெட்டிதான் விடை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

   அதனால் அந்த கருப்பு பெட்டியை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

   இந்நிலையில் கறுப்பு பெட்டி உட்பட பல முக்கிய பொருட்களை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி எடுத்துச்சென்றுள்ளனர்.

  இது கறுப்பு பெட்டியா என்று செய்தியாளர் ஒருவர் விணா எழுப்ப அதற்கு எஸ் என்று ராணுவ அதிகாரி பதிலளித்துள்ளது வீடியோவில் பதிவாகியுள்ளது.