சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைப்பு! ஆந்திராவில் வன்முறை!!

ம.பா.கெஜராஜ்,
500 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை அறிவோம். இந்நிலையில் அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆந்திரா முழுவதும் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது ஆங்காங்கே வன்முறை தொடர்கிறது.
ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அந்தக் காலக்கட்டத்தில் தான் ஆந்திராவுக்கு நூற்றுக்கணக்காக ஐடி நிறுவனங்கள் குவிந்தன. இந்நிலையில், புதிய ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்காக முறைகேடாக ரூ.118 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக போலீஸார் சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சந்திரபாபு நாயுடு மீது குற்ற முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சிஐடி அதிகாரிகளும் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அப்படியிருக்க இன்று அதிகாலை 3 மணிவரை சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரை இன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சந்திரபாபு நாயுடு அளித்த வாக்குமூலங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு போலீஸார் அழைத்து சென்று அங்கு அடைத்தனர்.
இதனால் ஆந்திராவில் சந்திரபாபுவின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்துள்ளார்கள். அங்கு வன்முறைகள் நடந்து வரும் நிலையில், போலிசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.