லஞ்சம் கொடுத்த வழக்கு! இந்திய தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்டு!

செட்னி எஸ்.வில்லியம்,
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சோலா£ மின்சாரம் வாங்கும் வகையில் அதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி ரூ.25,000 கோடி முதலீடுக்காக சட்டவிரோதமான லஞ்ச நடவடிக்கைகளை மறைத்தது அதானி நிறுவனம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடாக பெற்ற இந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பல முறை சந்தித்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஸுர் பவர் நிறுவனமும் இந்த லஞ்ச வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திர சட்டங்கள், விதிகளை மீறி செயல்பட்டதற்காக அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் கவுதம் அதானி, சாகர் அதானி, அஸுர் பவர் நிர்வாகிகள் மீது தனியாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, கவுதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது, சர்வதேச சட்ட அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊழல் பிரச்சனையில் தமிழக மின்வாரியமும் பட்டியலாகியிருக்கிறது.
ஆகவே அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் உள்ளதால் தமிழக அரசு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குரலெழுப்பியிருக்கிறார்.