கருணை கொலை செய்யக்கோரி வயதான தம்பதி ஆட்சியரிடம் மனு!

க.பாலகுரு,
தன்னையும் தனது கணவரையும் கருணை கொலை செய்திட அனுமதி வேண்டும் என கண்ணீருடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.
திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே அகரமேடு மெயின் ரோட்டில் தியாகராஜன்(வயது 74) மற்றும் மல்லிகா(வயது 64) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தியாகராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் தனது மனைவி மல்லிகா பெயரில் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். மேலும் மனைவி மல்லிகா பெயரில் ஒரு வீட்டையும் கட்டியுள்ளார்.
பிறகு தியாகராஜனின் மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த தியாகராஜன், மகன் ரவிக்குமாரை வெளிநாட்டிற்கு தனது சொந்த செலவில் வேலைக்கு அனுப்பியுள்ளார்.
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற ரவிக்குமார் பெற்றோர்களுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கேட்டதற்கு சம்பளம் கொடுக்காமல் அவரது கம்பெனி முதலாளி ஏமாற்றி விட்டதாக பெற்றோரிடம் ரவிக்குமார் கூறியுள்ளார்.
பிறகு ரவிக்குமார் 2018 ஆம் வருடம் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து, ரவிக்குமார் 2019 ஆம் வருடம் தனது தாயார் மல்லிகா பெயரில் உள்ள வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது பெயருக்கு வலுக்கட்டாயமாக மாற்றி எழுதி வாங்கி உளளார்.
இந்த நிலையில், தற்பொழுது ரவிக்குமார் கொல்லுமாங்குடி பகுதியில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.மேலும் பல வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
ஆனால் தனது பெற்றோர்களான மல்லிகா மற்றும் தியாகராஜனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். ஆகவே தியாகராஜன் மற்றும் மல்லிகா வாடகை வீட்டில் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மல்லிகா அவரது பெயரில் உள்ள வீட்டை மீட்டு தருமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து, பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் சொத்துக்களை மீட்டு தராத காரணத்தினாலும், மேலும், தங்களை தாங்களே பராமரித்து கொண்டு வாழ வழி இல்லாத காரணத்தினாலும், தன்னையும் தனது கணவரையும் கருணை கொலை செய்திட அனுமதி அளிக்க வேண்டும் என மல்லிகா திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பெற்றோரை பராமரிப்பதே நாம் காணும் இன்பம்.