சொசைட்டி யூரியாவை வெளி சந்தையில் விற்க முயற்சி! 9 பேர் கைது!

கே.ஏ.ஜெகதீஸ்வரி
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடத்தலுக்காக பீடி இலைகட்டுகளும், மற்றும் சட்டவிரோத விற்பனைக்காக யூரியா உரத்தையும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 9 பேர் கைது - ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 2,400 கிலோ பீடி இலைகள், ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 14,400 கிலோ யூரியா உரம் மூடைகள், ஒரு லாரி மற்றும் கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் சட்டவிரோதமாக யூரியா மூடைகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை துறை ஓட்டப்பிடாரம் வட்ட உர ஆய்வாளரான திருமதி. சிவகாமி தலைமையிலான தூத்துக்குடி வேளாண்மை துறையினர் மற்றும் குளத்தூர் காவல் நிலைய போலீசார் குளத்தூர் தளவாய்புரம் நடு தெருவில் உள்ள ஒரு குடோனில் இந்த சோதனையை செய்தனர்.
அப்போது அங்கு சிலர் அரசு மானியத்துடன் விவசாயத்திற்கு வழங்கப்படும் மஞ்சள் நிற அரசு முத்திரையுடன் உள்ள யூரியா மூடைகளை பிரித்து அதில் உள்ள உரத்தை வேறு வெள்ளை நிற சாக்கு பைகளில் மாற்றிக் கொண்டிருந்தனர்.
அதை அதிக விலைக்கு தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்ததும், மேலும் அந்த குடோனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை பண்டல்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மேற்படி ஓட்டப்பிடாரம் வட்ட உர ஆய்வாளர் திருமதி. சிவகாமி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் அந்த குடோனில் உரம் மற்றும் பீடி இலைகளை பதுக்கி வைத்திருந்த 9 பேரை கைது செய்து, அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 2,400 கிலோ பீடி இலைகள், ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 14,400 கிலோ யூரியா உரம் மூடைகள், ஒரு லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.