தென்காசி - திருநெல்வேலி எஸ்பி-க்கள் அலார்ட்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தென்காசி மாவட்டம்,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு நடத்தினார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் விதமாக மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான உதவிகளை செய்யும் விதமாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 17 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தென்காசி ஆயுதப்படையில் வைக்கப்பட்டுள்ளது அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து, காவலர்களுக்கு மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பான முறையில் எவ்வாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இடதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினரை எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுரை வழங்கினார்.
மேலும் இடரிலுள்ள மக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம்,
அதே போல் பொதுமக்களை மழைகால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள SDRF பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆயுதப்படையில் பார்வையிட்டார்.
வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்யும் அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு குழுக்களை (Tamil Nadu State Disaster Response Force) எந்நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.
இக்குழுவில், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் வாய்ந்த காவலர்கள் உள்ளனர். மேலும் மழை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும் போதும் வெளியில் செல்லும் போதும் கவனமுடன் இருக்கவும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.