சரிந்து விழும் நிலையில் வாட்டர் டேங்க்! வேடிக்கை பார்க்கும் ஊராட்சி!

ஜி.கே.சேகரன்,
குடிநீர் மேல் நீர்தேக்க தொட்டியில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை,
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி, 8-வது வார்டு, திருவண்ணாமலையான் வட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வரும் இந்த மேல் நீர் தேக்க தொட்டி கடந்த சில மாதங்களாக மிகவும் சதியிலமடைந்து காணப்படுகிறது.
மேல் நீர்த்தேக்க தொட்டியில் தூண்கள் பழுதடைந்துள்ளதாகவும் அதை சீர்படுத்தி தருமாறு பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதியிடம் கோரிக்கை அளித்துள்ளனர். கிராம சபை கூட்டத்திலும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், கோரிக்கையின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மேல் நீர்த்தேக்க தொட்டிக்கு கீழே தூண்களை சுற்றி சிமெண்ட் காரை போட்டு உள்ளனர். இருந்த போதும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்போது வெயில் காலம் துவங்கியிருக்கும் நிலையில் குடிநீர் தேவை பொதுமக்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் மேல் நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழேவிழும் நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.