நீட் தேர்வால் மகன் தந்தை இருவருமே தற்கொலை!

உ.சசிகுமார்,
நீட் தேர்வு ரத்துக்கு எந்த காலத்திலேயும் கையெழுத்து போடமாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாக பேசி பல பெற்றோர்களின் வயிறெரிச்சலைக் கொண்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னை, குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. பிரிவில் படித்து 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அவருக்கு மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என தந்தையிடம் நம்பிக்கையோடு கூறினாராம்.
இதற்காக நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டி படித்து வந்த நிலையில், நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்களில் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்துள்ளனர்.
2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனகுழப்பத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், ஏற்கனவே 2 முறை தோல்வியட்ய்ந்ததை நினைத்து விரக்தி அடைந்தாராம். இதன்னால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வம் இன்று அதிகாலை மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.