மக்கள் விரோத செயல்களுக்காக கடத்தப்பட்ட 14 கோடியே 70 லட்சம் பறிமுதல்!

மக்கள் விரோத செயல்களுக்காக கடத்தப்பட்ட 14 கோடியே 70 லட்சம் பறிமுதல்!

  கு.அசோக்,

மக்கள் விரோத செயல்களுக்காக கடத்தப்பட்ட 14 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு. பணம்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

   வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று முன் தினம் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில்

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு சிறிய பண்டல்களை ஆட்கள் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த காவலர்கள் அவர்களிடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். ஆகவே அவர்கள் வைத்திருந்த பண்டலை பிரித்து பார்த்தபோது அதில் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பண்டல் மூலம் லாரியில் ஏற்ற முயன்ற சுமார் 14 கோடியே 70 லட்சத்தி 85 ஆயிரத்தி 400 ரூபாய் பணத்தையும் கார் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

  மேலும் பிடிபட்ட 4 பேரை கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து 22 மணி நேரம் விசாரணை மேற்கொண்டர்.

  விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த நிசார் அஹமத், மதுரையை சேர்ந்த வசீம் அக்ரம், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சர்புதீன் மற்றும் நாசர் என்பதும் இவர்கள் சென்னையில் இருந்து கேரளாவிற்கு பணத்தை கடத்த இருந்ததாகவும், இது தொடர்பாக வேலூர் டிஎஸ்பி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மத்திய புலனாய்வு துறையினர், அமலாக்க துறையினர் ஆகியோர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

  இதனையடுத்து பிடிபட்ட 4 பேர் மீது பணி செய்ய விடாமல் தடுத்தது காவலர்களை அவதூறாகப் பேசியது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

   மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 14 கோடியே 77 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கப் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது எதற்காக எடுத்துச் செல்லப்பட்டது? மக்கள் விரோத செயலுக்காக கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.