யார்தாங்க அந்த மரங்களை வெட்டியது? தயவு செய்து கண்டுபிடியுங்க ப்ளீஸ்...!
டி.நெல்சன்,
அரசு கலைக் கல்லூரியில் உள்ள பழமையான மரங்களை யார்தாங்க வெட்டியது? தயவு செய்து கண்டுபிடியுங்க ப்ளீஸ் என்று கல்வியாளர்கள் சிலர் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏழை வீட்டு பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் துவங்கப்பட்டது திருமகள் மில் கல்லூரி.இது அரசு கலைக்கல்லூரி ஆகும்.
அப்போதைய முதல்வர் காமராஜ்¢ அவர்கள் தான் இதற்கு காரணம்.
இந்த கல்லூரியில் பயின்ற பலர் அரசு பதவிகள் பலவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த கல்லூரியின் தற்போதைய பொறுப்பாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் அந்த வளாகத்திலுள்ள சுமார் பத்து டன் அளவிளான மருத்துவ குணம் மிக்க 6 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
அவ்வாறு வெட்டிய மரங்களை சிலர் மினி லாரிகள் மூலம் கடத்திச் சென்றுள்ளார்கள். இந்த காட்சிகளை கல்லூரியின் மீது அக்கறை கொண்ட நபர் வீடியோ எடுத்துள்ளார்.
நிதானமாக மரங்களை வெட்டி லாரியில் கடத்திப்போகும் அளவிற்கு கல்லூரி பொறுப்பாளர்கள் ரொம்பவே அட்ஜெஸ்டபிளாக இருந்துள்ளார்கள்.
இது ஒருபக்கம் இருக்க குடியாத்தம் வன சரக அலுவலகம் அருகில் தான் இந்தக் கல்லூரி சுமார் 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு செம்மரம். தேக்கு, புளியன், வேம்பு, உள்ளிட்ட பல விலை உயர்ந்த மரங்கள் உள்ளன.
இது குறித்த தகவல்கள் வீடியோ ஆதரங்களுடன் இணையங்களில் வெளியாகி வரும் நிலையில் கல்லூரி மண்டல இனை இயக்குனர் முனைவர் எஸ்.காவேரியம்மாள் அவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மேற்படி அலுவலர் அந்த கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானபணிகளை பார்வையிட வந்ததாக சொல்வதுடன், அவரது உயர் அலுவலர்கள் சொன்னால் நடவடிக்கை எடுப்பாராம்.
அதே நேரத்தில் பொதுப்பணித்துறையினரிடம் அனுமதி பெற்று தான் மரங்களை வெட்டியதாக கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டதாம்.
நாம் மாவட்ட அளவிளான சில அலுவலர்களிடம் பேசிய வகையில் பச்சை மரங்களை வெட்ட அனுமதி கொடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை என்கிறார்கள்.
இதன் உண்மை தன்மையை அறிய கல்லூரி முதல்வரிடம் விவரங்களை அறிய முற்பட்டோம் ஆனால் அதற்கு அவர் முன்வரவில்லை.
மேலும் வெட்டப்பட்ட மரங்கள் முக்கியஸ்தர் ஒருவரின் கட்டிடபணிகளுக்காக வெட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அது சரி கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வராமலா போய்விடும்.