தமிழகத்தில் பாஜக அமோகமாக வளரும்! தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆருடம்!

ம.பா.கெஜராஜ்,
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தனியார் நிகழ்ச்சியில் தேர்தல் வியூக நிபுணர் என்று அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர், தமிழகத்தில் பாஜகவின் பாதை சரியாக உள்ளதா? அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் முடிவுகளில் அக்கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் பாஜக எந்த நிலையில் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது.
இருந்தாலும், ஒரு விஷயத்தை சொல்ல முடியும். பாஜக வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கும். பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் மிகவும் வலுவான மற்றும் பெரிய சக்தியாக வரக்கூடும். அதற்காக நாளையோ, அடுத்து வரும் தேர்தலிலோ வெற்றி பெற்று விடுவார்கள் எனச் சொல்ல முடியாது.
அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் படிப்படியாக தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்கும் வேலையில் ஈடுபடுவர். ஏன், 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று சொன்னார்.
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தனித்துவமிக்க மாநிலமாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கோ அல்லது பிரதான எதிர்க்கட்சிக்கோ வாக்களிக்கவில்லை. அதாவது திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். எனவே இந்த வாக்காளர்களை கவருவதற்கான இடம் உருவாகியிருக்கிறது.
இந்த இடத்தை புதிதாக வருவோர் பயன்படுத்திகொள்ள வாய்ப்புள்ளது. சொல்லப் போனால் பாஜகவிற்கு கூட வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் சில அரசியல் சக்திகளை பார்க்கலாம். 4 சதவீதம், 5 சதவீதம், 8 சதவீதம் என தமிழகத்தில் வாக்கு வங்கியை வைத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு மேல் அவர்களால் வளர முடியவில்லை. ஏனெனில் அதற்குரிய வேலையை அவர்கள் செய்யவில்லை.
எனவே இரண்டு திராவிட கட்சிகள், இதர சிறிய கட்சிகள் ஆகியவற்றை சாராத வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றனர். இவர்களை குறிவைக்கும் புதிய அரசியல் சக்திகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
குறிப்பாக பாஜகவின் வளர்ச்சி தமிழக அரசியலை மாற்ற்றிப்போடும் சக்தியாக அமையும் என்பதே பிரசாந்த் கிஷோரின் கணிப்பு .