சபதத்தை கைவிட்டு சசிகலாவுக்கு கவசம் போட்டாரா ஓ.பி.எஸ்.?

சபதத்தை கைவிட்டு சசிகலாவுக்கு கவசம் போட்டாரா ஓ.பி.எஸ்.?

ம.பா.கெஜராஜ், 

 ஜெயலலிதா இறப்பு தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சில பல சர்ச்சைகள் இருந்தது. அதற்காகவே ஓ.பி.எஸ்.தர்மயுத்தம் நடத்தினார் என்று பேசப்பட்டது.

 பின்னர் ஜெ...மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் அதன் செயல்பாட்டை துவங்கி எட்டு முறை சம்மன் அனுப்பியும் தட்டிக்கழித்து, ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்காமல் டேக்கா கொடுத்து வந்தார் ஓ.பி.எஸ்.

 இந்நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்,  ஆணையத்தின் விசாரணைக்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஓ.பி.எஸ்ஏற்பட்டது.

 ஆகவே இனியும் டேக்கா கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதால் நேற்றும், நேற்று முன்தினமும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.

 அங்கு அவர் அளித்த பதில்கள் மூலம் சசிகலாவுக்கு பாதுகாப்பு கவசம் போட்டாரா என்கிற ஒரு பார்வை அவர் மீது படர்ந்திருக்கிறது. 

  அந்தக் கால கட்டத்தில், முதலமைச்சராக இருந்தவரே ஓ.பன்னீர்செல்வம் தான்.

  அவருக்கு அனைத்து விஷயங்களும் தெரிஞ்சிருந்தும், தெரியாது.. தெரியாது... என்றே பதில் சொல்லியிருக்கிறார்.

 குறிப்பாக நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்விகளில் 78 இல் 50 க்கு தெரியாது என்றே பதில் அளித்திருந்தார்.

 நேற்று மீண்டும் ஆறரை மணி நேரம் நடந்த விசாரணையில் 87  கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது.    

 இரண்டு நாட்களில் அவரிடம் நடத்தப்பட்ட 9 மணி நேர விசாரணையில் 165 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட்ட விசாரணை முடிவடைந்தது.

 கேள்வி மற்றும் பதில்கள்.

 *"இடைத் தேர்தலையொட்டி அந்தப் படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா?"

  "திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.

  அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாகக் கூறினார்.

  இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் இதுதொடர்பாக நான் பேசவில்லை.

  அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

  ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது' என்று கூறியிருந்தார்.

மேலும், "2016 டிசம்பர் 5-ம் தேதி இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவை நான் உட்பட அமைச்சர்கள் 3 பேர் அவரை நேரில் பார்த்தோம். உயிர்காக்கும் கருவியாக இருக்கக்கூடிய எக்மோ கருவியை ஜெயலலிதாவின் உடலில் இருந்து அகற்றுவதற்கு முன் அவரை நேரில் பார்த்தேன்.

 அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, ஜெயலலிதாவை சந்திக்காமல், பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் நினைவில்லை.

 அன்றைய தினம் ஜெயலலிதா இதயத் துடிப்பு செயலிழந்த நிலையில், மீண்டும் இதயத் துடிப்பைத் தூண்டும் சிகிச்சை அளித்தது குறித்து எனக்கு தெரியாது.

 ஆனால், அன்று மாலை எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார்.

  மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது.

  ஓ.பி.எஸ்ஸிடம் மருத்துவம் தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, அதற்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "நேற்றே மருத்துவ சிகிச்சை தொடர்பாக அவர் எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டதால், மீண்டும் அதுதொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம்" எனக் அப்ஜெக்ஷன் தெரிவித்தார்கள்.

  அதன் பின்னர், ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படவில்லை.

 குறுக்கு விசாரணை

  பின்னர் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

 கேள்வி: "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீதான குற்றச்சாட்டு களைய வேண்டும் என்பதற்காகத்தான் ஆணையம் அமைக்கப்பட்டது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நீங்கள் பேட்டி அளித்திருந்தது சரியா?"

ஓ.பி.எஸ் பதில்: "சரிதான்"

கேள்வி: "விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி நான்கரை மணி வாக்குமூலம் அளித்த பிறகு உங்களுக்கு ஜெயலலிதா மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா?"

ஓ.பி.எஸ் பதில்: "ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், மக்களின் எண்ணத்தை நான் பிரதிபலித்தேன். ஆணையம் தான் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களைக் களைய வேண்டும்."

 கேள்வி: "ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டது நீங்கள்தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள்தான், தற்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள்?"

  ஓ.பி.எஸ் பதில்: "துணை முதல்வர் என்ற அடிப்படையில் அதில் நான் கையெழுத்திட்டேன். ஆணையம் என்னை வரவழைத்ததால், 2 நாட்களாக ஆஜராகி பதிலளித்திருக்கிறேன்."

 கேள்வி: "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில், அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பதை விசாரிக்கத்தான் ஆணையம் அமைக்கப்பட்டது என்பது சரிதானா?"

ஓ.பி.எஸ் பதில்: "சரிதான்."

கேள்வி: "சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் அபிமானமும், மரியாதையும் உள்ளதா?"

ஓ.பி.எஸ் பதில்: "சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்றுவரை உள்ளது."

கேள்வி: "விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் யாரிடம், என்னென்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து தெரியுமா?"

ஓ.பி.எஸ் பதில்: "நான் தெரிவித்த பதில்கள் அனைத்தும் பத்திரிகைகளில் முழுமையாக வந்துள்ளது. இதற்குமுன் அப்படி வரவில்லை. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது."

கேள்வி: "இந்த ஆணையத்தின் முன் ஆஜராகியிருந்த 8 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அளித்துள்ள சாட்சியத்தில், 2011-12 காலகட்டத்திலும் அதன் பின்னரும் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் தீட்டியது இல்லை என்று கூறியுள்ளனரே, இது சரியா?'

ஓ.பி.எஸ் பதில்: "சாட்சியங்கள் அதிகாரிகள் ஆணையத்தில் கூறியது சரிதான். ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை.

2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான வீரபெருமாள் என்பவரை அழைத்து என்னை அழைத்துவருமாறு கூறியுள்ளார்.

என்னிடம் இதுபோல தீர்ப்பு வந்துள்ளதாக கூறி, உடனடியாக சென்னைக்கு விரைந்து அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்யவும், அமைச்சர்களைக் கூட்டி அடுத்த முதல்வரை தேர்வு செய்யும்படியும் ஜெயலலிதா கூறினார்.

 அப்போது கண்கலங்கிய நிலையில் இருந்த என்னை, 'பன்னீர் அழுகாதீர்கள்,இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்' என்று ஜெயலலிதா கூறினார்."

 அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நடைபெற்ற விசாரணை முடிவுபெற்றது. இதில் மொத்தமாக அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் 120 கேள்விகள், சசிகலா தரப்பில் 34 கேள்விகள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 11 கேள்விகள் என மொத்தம் 165 கேள்விக்கள் கேட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆணையத்தில் முன்னுக்குப்பின் முரணாக  கூறியுள்ளார் என்கின்றனர்.

 கடந்த 2017 ஆம் ஆண்டுஏப்ரல் 18 அன்று செய்தியாளர்களிடம், ஓ.பன்னீர்செல்வம் கூறியதை பார்ப்போம்.

 "அதிமுக பிரிந்துள்ள இரு அணிகளும் ஒன்று சேர இருப்பதாக கூறுகிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். இதுவரை யாரும், எந்த குழுவினரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அதை பற்றி பேசவும் இல்லை.

 ஒரே அணியாக செல்வதானால், எனக்கு நிபந்தனை இருக்கிறது என நான் செய்தியாளர்களிடம் கூறினேன். ஆனால், அதன் அர்த்தம் மாறிவிட்டது. பத்திரிகைகளில் செய்தி வேறு விதமாக வந்து கொண்டு இருக்கிறது. இதில், அடிப்படை விளக்கம் எதுவும் இல்லை.

  எங்களது நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். ஜெயலலிதாவின் மறைவில் உள்ள மர்மம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரம் வேண்டும்.

ஒரு குடும்பத்திடம் கட்சியும், ஆட்சியும் போக கூடாது என கட்சியை ஆரம்பித்த அப்போதே எம்ஜிஆர் முடிவெடுத்தார். அதனால்தான், தனது அண்ணன் மற்றும் குடும்பத்தினரை கட்சியிலும், ஆட்சியில் சேர்க்கவில்லை. அதையே ஜெயலலிதாவும் கடைபிடித்தார்.

 ஜனநாயக முறைப்படி கட்சியும், ஆட்சியும் நடக்க வேண்டும் என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நினைத்ததார்கள். மக்களின் விருப்பப்படியே, ஆட்சியை நடத்தினார்கள். அதையே நாங்களும் விரும்புகிறோம்.

 இப்போதும் சரி, எப்போதும் சரி, எங்களது நிலை ஒரே மாதிரியாக இருக்கிறது. இது தர்மயுத்தம். நாங்கள் தொடங்கிவிட்டோம். அதன் முடிவு வரும்வரை ஓயமாட்டோம். ஜெயலலிதாவின் மறைவில் உறுதியான நீதி விசாரணை நடத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம்." என சபதமிட்டு பேசியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது