அம்பேத்கர் புகைபடத்தை நீதிமன்றங்களில் வைக்க தடையில்லை! முதல்வரின் நடவடிக்கையால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ம.பா.கெஜராஜ்,
அம்பேத்கர் புகைபடத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்கிற சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்து பெரிய சர்ச்சையை தடுத்திருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையும், அவரது உத்தரவை ஏற்று மின்னலாக செயல்பட்ட சட்ட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களின் வேகமும், இதனை ஏற்று முற்றுப்புள்ளிக்கு உதவிய தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா அவர்களையும் பலதரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் ஆகிய இருவரின் புகைப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும். வேறு யாருடைய புகைப்படத்தையும் வைக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அவர்கள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
இந்த சுற்றறிக்கையின் பின்னணியில் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல் இருப்பதாக தகவல்கள் வெளியாயின.
மேலும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக் கோரிய வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கு வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்திய அரசியலப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்ருக்கே நீதிமன்றத்தில் இடமில்லையா? அப்படியெனில் சனாதனம் இங்கேயும் புகுத்தப்படுகிறதா? என்று முழங்கியதுடன் மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்கள் முன்பாக போராட்டங்கள் ஏற்பட்டது.
தமிழக அரசு நிலைப்பாடு
இந்நிலையில் தமிழக அரசு முக்கியமான செய்திக் குறிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை அடுத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் மாண்பமை மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா அவர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கேட்டறிந்த தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.
தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என்று தெரிவித்தார். இந்த தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக அம்பேத்கர் புகைப்படம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.