மணல் முதல் ரோல்ஸ் ராய் கார் வரை பறிமுதல்! ஒன்னுமே பிடிக்கவில்லை என்கிறார் முன்னாள் மந்திரி வீரமணி!

ஜி.கே.சேகரன்,

   முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர் என பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு எவிடன்ஸ் கிடைக்காமல் வெறும் கையோடு சென்றார்கள் என்று கூறிவருகிறார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

இது பற்றின விவரம் வருமாறு,

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணி வசித்து வருகிறார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

 அறப்போர் இயக்கம் சார்பில் தகுந்த ஆவணங்களுடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

  இந்த சோதனையானது, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் அவரது உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய கட்சிக்காரர்களின் குடியிருப்புகளை உள்ளடக்கிய பெங்களூர் மற்றும் சென்னையில் 6 இடங்கள் உட்பட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதிகாலை முதல் தொடர்ந்து 14 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் தற்பொழுது வரை கைப்பற்றப்பட்ட சொத்து மற்றும் ஆவணங்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூலமாக வெளியாகியுள்ளன.

 அதில் வீரமணி அவரது உறவினர் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களில்  வீடுகளில் தற்பொழுது வரை தோராய மதிப்பாக சுமார் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் ஐந்து கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள்,  275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

   மேலும், 30 லட்சம் மதிப்பிலான மணலும் கணக்கிடப்பட்டுள்ளது. இருந்தும் அந்த மணலை இன்று பிற்பகல் வரை பறிமுதல் செய்யவில்லை.

    சோதனை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பேட்டியில்,நேரத்தை வீணடித்து அரசியல் விளம்பரம் தேட செய்யப்பட்டது இந்த சோதனை.

   வரலாற்றில் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம்.

  அரசியல் காழ்புணர்ச்சிக்காக 5 ஓன்றிய கழக செயலாளார்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்துவது.அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்துவது இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லை. சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்க்காகவேஇதை போன்ற ஆளும் கட்சியினருடைய ரெய்டு என்ற பெயரில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  நாங்கள் எதையும் நீதிமன்றத்தின் வாயிலாக சந்திக்க தயாராக உள்ளோம்.இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு எந்தவித எவிடன்சும் (ஆதாரமும்) கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள்.

    நீதிமன்ற வாயிலாக எந்த வழக்கு தொடுத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதத்தில் சந்திக்க வேண்டுமோ அதற்க்கு தயாராகவே இருக்கிறோம்.

 ரெய்டு போன்ற அச்சுறுத்தல்களையெல்லாம் கடந்த காலத்தில் நாங்கள் கடந்து வந்தவர்கள். 50 ஆண்டை கடந்த கட்சி அதிமுக. எதிர்வாரும் பல 100 ஆண்டுகாலத்துக்கும் இயக்கம் வளர்வதற்கும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.