செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலிஸ்காரர்:- முதலில் சஸ்பெண்டு - இப்போது கைது!

க.பாலகுரு,
ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருவாரூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் 24வயது பெண் காவலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் வழங்க சென்று திருவாரூர் திரும்ப முயன்றார்.
அப்போது ஆயுதப் படையில் காவலராக பணிபுரியும் சற்குணம் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய உத்தரவிட்டதன் பேரில் விசாரணை நடைபெற்று தொடர்ந்து விசாரணையின் முடிவில் காவலர் சற்குணம் பெண் காவலர் மீது அத்துமீறி தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் காவலர் சற்குணத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நிலையில் சற்குணம் பெண் காவலருக்கு தொந்தரவு கொடுத்த அத்துமீறிய காவல் நிலைய எல்லைப் பகுதியான கொரடாச்சேரி காவல் நிலையத்தில் சற்குணத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.