309 பயனாளிகளுக்கு ரூ.1.02 கோடியில் நலத்திட்ட உதவிகள்: வேலூர் ஆட்சியர் வழங்கினார்!

ஜிகேசேகரன்,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சேர்பாடி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் முன்னிலையில் 309 பயனாளிகளுக்கு ரூ.1.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்மனுநீதி நாள் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கூட்டுறவுத்துறை, பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிகழ்ச்சியில், சேர்பாடி கிராமத்தில் வருவாய்த் துறையின் சார்பில் 284 பயனாளிகளுக்கு ரூ.69,00,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000/- மதிப்பில் நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டன.
தொடர்ச்சியாக தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 47,880/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.32,00,000/- மதிப்பில் நலத்திட்ட உதவியும் என ஏற்கனவே பெறப்பட்ட 394 மனுக்களில் 309 மனுக்கள் ஏற்கப்பட்டு 309 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,02,42,880/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 42 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, பேசுகையில் மனுநீதி நாள் முகாமானது அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் தாய் திட்டம் போன்றது. 25 ஆண்டுகளுக்கு முன்னரே மனுநீதி நாள் முகாமானது ஏற்படுத்தப்பட்டு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புறங்களை தேர்வு செய்து 15 நாட்களுக்கு முன்னதாகவே பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.
இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளுக்கான நலத்திட்டங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் தினத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதற்காக உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவ்வப்பொழுது ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதிலும், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் அரசு அதிகாரிகளாகிய நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநா ஆர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு. கலியமூர்த்தி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி இரா.க. கவிதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழுத் தலைவர் திரு. சி. பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரகாஷ், சேர்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா, அணைக்கட்டு வட்டாட்சியர் திருமதி வேண்டா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.பி.கதிர் ஆனந்த்,
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிழற்கூடங்கள் பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி எம்பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள புதுர், மேல்கொத்த குப்பம்.புத்தூர்.மற்றும் கொத்தூர் சப்ஸ்டேஷன் போன்ற கிராமங்களில் வேலூர் நாடாளுமன்ற நிதி மற்றும் சட்டமன்றத் தொகுதி நிதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நிழற்கூடங்கள் மற்றும் பள்ளி கட்டிடங்களையும் மேலும் புதிய பேருந்து நிழற் கூடங்களுக்கான கட்டிடம் கட்டிட அடிக்கல் நாட்டப்பட்டது.
பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹ்மத், ஒன்றிய குழு துணை தலைவர் லலிதா டேவிட், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி ஊராட்சி மன்ற தலைவர்கள் கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.