கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.முயற்சி! பிரபல நடிகரின் ஆதரவு கிடைத்தது!

கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.முயற்சி! பிரபல நடிகரின் ஆதரவு கிடைத்தது!

ஆர்.செல்வராஜ்,

 அடுத்த மாதம் 10-ந் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வென்று ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதன் பேரில் பிரபல நடிகரின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

அப்படியிருக்க காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2-வது கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிமும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன.

 அதே போல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பில் பா.ஜனதாவும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பெங்களூரு புறநகரில் உள்ள ஓட்டலில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

   அந்த கூட்டத்தில் 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கர்நாடக தலைவர்கள் தயார் செய்து வைத்திருப்பதாக பேசப்பட்டது.

   125 தொகுதிகளுக்கான பட்டியலை பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அதனை மேலிட தலைவர்கள் பரிசீலித்துவிட்டு, வருகிற 8 அல்லது 9-ந் தேதி 125 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

  அதே நேரத்தில் பிரச்சினைகள் இருக்கும் தொகுதிகளுக்கு 3 பிரமுகர்களின் பெயர்களை மேலிடத்திற்கு சிபாரிசு செய்யும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு, மேலிடம் உத்தவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தீர்மானித்துள்ளனராம்,

நடிகர் ஆதரவு,

 இந்நிலையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பிரபல கன்னட நடிகர் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது. இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

   காங்கிரஸ் கட்சியும் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

   இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், நடிகர் சுதீப்பும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

  அப்போது நடிகர் சுதீப் கூறுகையில்:- நான் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எனக்கு ஆதரவாக இருந்திருந்தார். கஷ்டமான நேரத்தில் எனக்கு உதவிகளையும் செய்துள்ளார். தனக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யும்படி பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார். அதன்படி, பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.

   அவர், எந்த தொகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்ய சொல்கிறாரோ, அங்கு நான் பிரசாரம் செய்வேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சியை பார்த்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. பசவராஜ் பொம்மை என்ற ஒரு நபருக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.

   சட்டசபை தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் போட்டியிடவில்லை. அரசியலுக்கும் வர மாட்டேன். வேறு கட்சியில் இருந்து யாராவது பிரசாரத்திற்காக அழைத்தாலும், அவர்களுக்காகவும் பிரசாரம் செய்வேன். நான் கஷ்ட காலத்தில் இருந்த போது உதவியவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.