உட்டாலக்கடி உள்ளாட்சி பதவிகள்! காவல் துறையை கண்டித்த ஆளுங்கட்சியினர்!

  ஜி.கே.சேகரன், ஆர்.ரமேஷ்,

ஊரகஉள்ளாட்சி தேர்தல் வேலூர்,திருப்பத்தூர், இராணிப்பேட்டை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்றது.

 அதற்கான முடிவுகள் கடந்த 12-ம் தேதி முதல் மறுதினம் காலைவரை வெளியாகியது. அவற்றில் ஆளும் திமுக கட்சி அதிகபடியாக ஊராட்சிகளை வென்றது. அ.தி.மு.க.வுக்கு நினைத்தபடி ஊராட்சிகள் கிடைக்கவில்லை.

 இதனால் குஷியாக வேண்டிய திமுககாரர்கள் மனகசப்பு அடைந்தனர்.

 மறைமுக தேர்தலில் ஒன்றிய சேர்மன் போன்ற பதவிகளை பிடிப்பதற்கு உட்கட்சிக்குள் போட்டி உருவாகிவிட்டதே என்கிற நினைப்புத்தான் அதற்கான காரணம்.

 அது உண்மையுங்கூட என்பதை பல மாவட்டங்களில் நடந்த சர்ச்சைகள் எடுத்துரைக்கின்றன.

 செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மறைமுக தேர்தலே தள்ளி போடப்பட்டிருகிறது.

 திருப்பத்தூர் மற்றும் தென்காசி மாவட்டம் போன்றவற்றில் ஏகப்பட்ட ரகளை ஏற்பட்டிருக்கிறது.

 இதில் வேலூர் மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சர்ச்சை ஏதும் ஏற்படவில்லை.

  வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவை சேர்ந்த மு.பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.திமுக அனைக்கட்டு ஒன்றிய செயலாளரான மு.பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 பாபு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக மனத்தாங்களில் இருந்து வந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்று திமுகவினர் மத்தியில் பேசப்படுகிறது.

  இவருக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் பதவிபிரமானம் செய்து வைத்தார். 

  அதே போல் நெல்லை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

  இதில் 19-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 வயதான இளம்பெண் ஸ்ரீலேகா, ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலரிடம் வேட்பு மணு தாக்கல் செய்தார்.

  அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஸ்ரீலேகா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 இணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில், 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 இடங்களை திமுகவும், 1 இடத்தை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது.

  இந்தநிலையில், திமுக சார்பில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயந்தி திருமூர்த்தி போட்டியிட்ட நிலையில் அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் மறைமுக தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததால் அந்த ஒன்றியத்தில் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவராக திமுகவின் ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா பாரி ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்ற நிலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   அதில் ஒரு உடன்பிறப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சமரசம் செய்து வைத்தார்.

  திமுகவுக்கு துரோகம் செய்ததாகவும், அதிமுகவுக்கு கைக்கூலியாக மாறியதாகவும் எம்பி கதிர் ஆனந்தையும், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனிவேல் மற்றும் ஞானவேல் ஆகியோரை கண்டித்து திமுக ஒன்றிய குழு உறுப்பினர் காயத்ரியின் ஆதவாளர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் திமுகவை சேர்ந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சூர்யகுமார் வெற்றி பெற்றார்.

  நாட்றம்பள்ளி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வாக்களிக்க பவுன்சர்களுடன்  பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

 இந்த தேர்தலில் தலைவராக வான்மதியும் துணைதலைவராக திமுகவை சேர்ந்த தேவராஜும் வெற்றி பெற்றும் பதவியேற்றுகொண்டனர்.

 இதே போன்று மாதனூர் ஒன்றிய தலைவராக திமுக சுரேஷ்குமாரும்,ஜோலார்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினராக சத்யாவும்,ஆலங்காயம் ஒன்றிய குழு உறுப்பினராக சங்கீதாவும் கந்திலி சேர்மேனாக திருமதியும்,திருப்பத்தூ ஒன்றிய சேர்மேனாக விஜயாவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தேர்தல் நடந்த ஒன்பது மாவட்டங்களில் அதிகமாக இடத்தை வென்றதாக திமுக தலைமை அதன் மனநிறைவை கொண்டாட முடியாதபடிக்கு திமுகவினர் ஒருவரை ஒருவர் பொது வெளியில் சாடி கோஷமிட்டனர்.

  ஆளுங்கட்சியினரே போலிஸ் அராஜகம் ஒழிக என்று கத்தி கூச்சலிட்டதும் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது.

   இப்படிப்பட்ட உடன்பிறப்புக்களை தலைமை கொஞ்சம் உற்றுப் பார்க்க வேண்டும் என்பது உண்மையான திமுக தொண்டர்களின் அவா.