பெண் குழந்தைகளை விற்கும் ஆப்கன் பெற்றோர்! யூனிசெஃப் கவலை!

பெண் குழந்தைகளை விற்கும் ஆப்கன் பெற்றோர்! யூனிசெஃப் கவலை!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஏற்பட்டப்பிறகு பெண் குழந்தைகளை விற்கும் நிலைக்கு ஆப்கன் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அங்கு வசிக்கும் மக்கள் துயரத்தின் உச்சத்தை தொட்டுள்ளார்கள். குடிமக்களை கொல்வது மிகச்சாதாரண விஷயமாக உள்ளது. பெண்களின் நிலை படுமோசம், குழந்தைகளின் நிலை சொல்லவே வேண்டாம். லட்சக்கணக்கான குழந்தைகளின் நிலை ஆப்கனில் கேள்விக்குறியாக உள்ளதாக யூனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகள் கவலைத்தெரிவித்துள்ளன.

  அங்குள்ள அரசியல் சூழ்நிலை மாற்றம் காரணமாக அங்கு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உணவுக்கு மக்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

  கரடு முரடான ஆட்சி ஒருபுறம், வறுமை, வேலையின்மை மறுபுறம், அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள், ஒரே நாளில் வறுமையின் விளிம்புக்கு வந்த குடும்பங்கள் என மக்கள் அங்கு மூச்சுவிட திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

  வாழ்வாதாரத்துக்காக தான் பெற்ற குழந்தைகளையே, குறிப்பாக பெண் குழந்தைகளை விற்கும் நிலைக்கு ஆப்கன் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  ஒரு தந்தை தனது 9 வயது மகளை 55 வயது நபர் மணமுடிக்க அவருக்கு விற்கும் நிலையில் ஒரு தகப்பனாக எதுவும் செய்ய இயலாக குற்ற உணர்ச்சியால் உடைந்து போனதாக செய்தியாளரிடம் கூறி அழுதுள்ளார்.

  ஆப்கானிஸ்தானில் உள்ள பத்கிஸ் அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசிப்பவர் அப்துல் மாலிக். ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்தப்பின் வீட்டைவிட்டு அகதிகள் முகாமில் குடும்பத்துடன் தங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.  

  வெளியில் சென்று உழைத்தும் வருமானம் பற்றாக்குறை, வேலையும் இல்லாத நிலை, குடும்பத்தைக் காப்பாற்ற 55 வயது நபருக்கு தனது 9 வயது மகளை விலைபேசி விற்க ஒப்பந்தம் போட்டார்.

  மகள் பர்வானா மாலிக், அவரது தந்தையால் 55 வயது நபருக்கு விற்கப்பட்டபோது அந்த சிறுமி அழுது முரண்டு பிடித்தார். அப்போது அந்த 55 வயது பெருசு சிறுமியை அடிக்க முயல, என் மகள் குழந்தை  தயவு செய்து அவளை அடிக்காதீர்கள் என்று இயலாமையாக கதறியிருக்கிறார் அந்த தந்தை.

  சி.என்.என். செய்தியாளருக்கு இந்த தகவலை அழுதபடி அவர் தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காக்க இதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை என கதறியுள்ளார்.

  கடைசியாக அவர் சொன்னது எனது நிலையை நினைத்து குற்ற உணர்ச்சியால் வெட்கமாக இருக்கிறது.

  இதுபோன்ற பல கதைகள் அந்நாட்டில் உள்ளன, வறுமையால் வாடிய மற்றொரு மூதாட்டி தனது இரண்டு பேத்திகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தகவலை அப்னா செய்தி தளம் பதிவு செய்துள்ளது. ருப்சான சமிமி (56) என்கிற அப்பெண் மத்திய ஆப்கனில் உள்ள ஹிந்துகுஷ் பகுதியில் வசித்தவர் திடீர் ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு பேத்திகளை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

  எங்களுக்கு உதவ யாருமே இல்லை, யாராவது உதவி இருந்தால் என் இரண்டு பேத்திகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் கதறியுள்ளார். இதுபோன்ற கதைகள் மட்டுமல்ல ஆப்கனில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐநாவுக்கான உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.

  2.28 கோடி ஆப்கன் மக்கள் பட்டினியால் மடிவதை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆப்கனில் தாலிபான் அரசு அமைந்தப்பின் ஏற்பட்டுள்ள நிலையால் "ஆப்கானிஸ்தான் இப்போது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியில் உள்ளது.

 பேரழிவுக்கான கவுண்ட்டவுனில் இருக்கிறோம் என ஐநா உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறியுள்ளார்.

  ஆப்கானின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் அப்துல் மாலிக் போன்று எத்தனை தந்தைகள் குழந்தைகளை விற்கும் நிலை ஏற்பட போகுதோ அல்லது பட்டினியால் மடியும் நிலை ஏற்பட போகுதோ என்கிற கேள்வி குழந்தைகள் நல ஆர்வலர்களை வாட்டி வருகிறது.

 வீட்டில் உள்ள மற்றவர்களின் பசியை போக்க 55 வயது நபருக்கு தனது 9 வயது மகளை விற்ற ஆப்கன் தந்தை என் மகள் சிறுமி அவளை அடிக்காதீர்கள் என கெஞ்சலாக கதறும் சம்பவம் பார்ப்போரை கலங்க செய்துள்ளது.

இறைவா ஏன் அநாட்டு மக்கள் மீது உனக்கு இவ்வளவு கோபம்?