அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பெண் அமைச்சர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்!

டி.இ.முகமது,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் நிலோபர் கபில்.இவர் அதிமுகவில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவர்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் சீட்டு கொடுத்து வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.
பின்னர் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் வாணியம்பாடி தொகுதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்தது.
அப்போது பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.சி. வீரமணிக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் என்பதால் அதிகாரப்போட்டி ஏற்பட்டது.
குறிப்பாக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை வகித்த கே.சி.வீரமணி மொத்த அதிகாரமும் தம் கையில் தான் உள்ளது என்கின்ற ரீதியில் செயல்பட்டார்.
இதனால் இரண்டு அமைச்சர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா மறைந்தார்.
அதற்கு பின்னர் நிலோபோர் கபிலுக்கு சற்று இறங்கு முகமாகவே இருந்தது.
இது போன்ற சூழ்நிலையில் நிலோபர் கபில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் திமுகவுக்கு செல்ல போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், அவற்றையெல்லாம் பொய்யாக்கி பொறுமையுடன் காத்திருந்தார்.
அப்படி இருக்க தற்போது நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சரான வீரமணியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் நிலோபர் கபில்.
அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.