கல்...பல்...ஜாபர் சாதிக்...சசிகலா காலில் விழுதல்.. அனல் பறக்கும் அதிமுக...திமுக தேர்தல் பிரச்சாரம்!

கல்...பல்...ஜாபர் சாதிக்...சசிகலா காலில் விழுதல்.. அனல் பறக்கும் அதிமுக...திமுக தேர்தல் பிரச்சாரம்!

 ம.பா.கெஜராஜ்,

 செங்கலை காட்டியும், சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுவதைப் போல உள்ள படத்தையும் தூக்கிகாட்டி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். பதிலுக்கு, போதை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்குடனும், மோடியுடன் உதயநிதி இருப்பதை போன்ற படத்தை தூக்கிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

 இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அமைச்சர் உதயநிதி, திமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

 அந்த வகையில் அவர் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் பேசும் போது எய்ம்ஸ் என்று எழுதியிருந்த செங்கலை தூக்கிக்காட்டி, இது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த செங்கல். அதையும் நான் மூன்று வருஷத்துக்கு முன்னர் எடுத்துச் சென்றுவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் வரை இதை பத்திரமாக வைத்திருப்பேன் என்று பேசினார்.

 அதன் பின்னர் சேலத்தில் பிரச்சாரத்தை துவக்கிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 40 வேட்பாளர்களை திருச்சியில் நடைபெற்ற பிரச்சார மேடையில் அறிமுகப்படுத்தினார்.

 அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிண்டலடித்தார்.

 திமுகவுக்கு நான் ஒரு அட்வைஸ் செய்ய விரும்புகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதை சொல்ல வேண்டியது நம் கடமை. தேர்தல் பிரச்சாரம் என்றால் ஒரு சுவாரஸ்யமும், அனலும் இருக்கணும். ஆனால், திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு போனாலே போர் அடிக்குதுனு மக்கள் சொல்றாங்க. என்னடானு கேட்டால், நம்ம அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதுக்கெடுத்தாலும் ஒரு செங்கல்லை தூக்கிட்டு பிரச்சாரத்துக்கு வந்து விடுகிறாராம். 2021-ல் தூக்குன செங்கலை இன்னும் கீழே வைக்க மாட்டேங்குறாரு.

 மூணு வருஷமா ஒரே செங்கலை காட்டிட்டு இருக்கியே. பார்த்து பார்த்து போர் அடிக்குதுய்யா, ஸ்கிரிப்ட்டை மாத்துய்யா. கதையை மாத்து. ரோடு ரோடா போய் செங்கல்லை காட்டுறியே? உன் கட்சிக்காரர்கள் 38 பேரை நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வெச்சாங்களே அந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போய் இந்த செங்கல்லை காண்பித்திருக்க வேண்டியது தானே.

 அதற்கு தில்லு, திராணி இல்லாம ரோட்டுல வந்து செங்கல்லை காமிச்சிட்டு இருக்கிங்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நாடாளுமன்றத்தில் பெஞ்சை தேச்சிட்டு இருந்துவிட்டு, இப்போ வந்து செங்கல்லை காட்டுறாராம் என்று தெறிக்கவிட்டார்.   

 இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நானாவது கல்லைக் காட்டுகிறேன், ஆனால் எடப்பாடி பழனிசாமிபல்லைக்காட்டுகிறார். இந்த படத்தை பாருங்கள் என்று மோடி - எடப்பாடி சந்திப்பின் போது உள்ள படத்தை காட்டி விமர்சனம் செய்தார்.

 இதற்கு தூத்துக்குடி கூட்டத்தில் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் மோடியுடன் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை காண்பித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நல்லா பாருங்க. இவர்கள் தான் கள்ள கூட்டணி வைத்திருக்கின்றனர்.

  சிரிக்கிறது தப்பா? நான் சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது நானும் அவருடன் இருந்து பல்லை காட்டியதாக கொச்சைப்படுத்தி பேசுகிறார் என்று மேடையில் சில படங்களை எடுத்துக் காட்டினார்.

 அதன் பின்னர், போதை கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் ஜாபர் சாதிக்குடன் உதயநிதி மற்றும் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிகாட்டினார் எடப்பாடி,

   இதனால் தேர்தல் களம் போட்டோ போட்டியாக மாறியது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

 வேலூர் மண்டிவீதியில்¢ பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். நான் பிரதமர் மோடியை 2 முறை சந்தித்தேன். ஒரு முறை நீட் தேர்வில் ரத்து வேண்டும் என்று கேட்டேன். 2வது முறை சந்திப்பின்போது வெள்ள பாதிப்பின் போது நிவாரணம் வேண்டும் என கேட்டேன்.

 எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று நான் பாஜகவிவிடம் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் கோபம் வருகிறது. இதற்கு பெயர் தான் கள்ளக்காதல்.

 நான் ஒரு படத்தை காட்டுகிறேன். இதுமாதிரி இன்னொரு படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்'' எனக்கூறி சவால் விட்டு சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் காண்பித்தார்.

 யாருனு தெரியுதாம்மா, இதுதான் எடப்பாடி பழனிச்சாமி. வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் இந்த போட்டோவுக்கு பதில் சொல்லுங்க என்று கேள்வியெழுப்பி எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்த போட்டோ பாலிடிக்ஸிக்கு பதிலடி கொடுத்தார்.

 திருச்சி கூட்டத்தில் ஸ்கிரிப்டை மாற்றி பேசுங்கப்பா என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் சென்னார்.அது இப்படி டேக் டைவர்ஸன் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது.