ரேஷன் கடைக்கு வந்து சென்ற காட்டு யானைகள்! மிரட்சியில் மக்கள் மற்றும் ஊழியர்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
காட்டு யானைகள் ரேஷன் கடைக்கு வந்து சர்க்கரை உள்ளிட்டவைகளை அள்ளி தின்றுவிட்டு சென்றிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளன.
அப்படியிருக்க, தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் ஊருக்குள் புகும் காட்டி யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட பொருட்களை திருப்தியாக சாப்பிட்டுவிட்டு செல்கிறது.
அந்த வகையில் தற்போது தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் நஞ்சுண்டாபுரம் நியாய விலை கடையை சேதப்படுத்தி அரிசியை சர்க்கரையை ருசித்தது.
உடனே, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வெளியேறி விடுவதாகவும், இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் மூன்று முறை இந்த ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
இது குறித்து பேசிய ரேஷன் கடை பணியாளர் அமுதா, நேற்று வந்த யானை கூட்டம் சர்க்கரை மற்றும் அரிசியை சேதப்படுத்தி சென்றதாகவும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த யானைகள் ஜன்னல்களையும் சேதப்படுத்தி சென்றதாகவும், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கடிதம் தருவதாகவும் அதனை அரசாங்கத்திடம் தொடர்ந்து அளித்து வந்தாலும் தற்போது வரை எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை, இந்நிலையில் தற்போது வந்த யானைகள் 25 கிலோ சர்க்கரை 20 கிலோ அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்றதாகவும் மிரட்சியுடன் சொன்னார்.