மார்ச் மூன்றாவது வாரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல்?

ம.பா.கெஜராஜ்,
பொங்கல் விழா கடந்த பின்னர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
சென்னை கோயம்பேட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் கிரிராஜன், சுந்தர். அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல். பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தினர்.
அதன் பேரில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் பிரதிநிகளுடனான ஆலோச¬
ன கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு:- கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுதினம் (ஜன.21) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.