அமலாக்கத் துறை மத்திய ஏஜென்சி! போலிஸ் யாருடைய ஏஜென்சி!சரமாரியாக கேட்ட நீதியரசர்!

உ.சசிகுமார்,
அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினால் மட்டும் மத்திய அரசின் ஏஜென்சி என்று குற்றம் சாட்டுகிறீர்கள். தமிழ்நாடு காவல் துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது என்று வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதியரசர் கேள்வியெழுப்பினார்.
இராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தனது மனுவில், "பாமகவின் மது விலக்கு உள்ளிட்ட கொள்கைகள் குறித்து பரப்புரை செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கேட்டு காவல் துறையிடம் மனு அளித்தேன். ஆனால், காவல் துறை எனக்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆகவே, என்னுடைய மனுவினை பரிசீலித்து பேரணிக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் எல்லாம் அனுமதி வழங்குகிறீர்கள்? மதுவுக்கு எதிராக பரப்புரை செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல் துறை அனுமதி வழங்குமா என்ன? காவல் துறையினர் யாருக்காக உள்ளனர்? ஆளுங் கட்சிக்காகவா அல்லது பொது மக்களுக்காகவா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினால் மட்டும் மத்திய அரசின் ஏஜென்சி என்று குற்றம்சாட்டுகிறீர்கள். தமிழ்நாடு காவல் துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவரங்கள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட அவர், அப்படி ஒருவேளை யாருக்காவது அனுமதி வழங்கப்பட்டிருந்தால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியது இருக்கும் எனவும் எச்சரித்து வழக்கு விசாரணையையும் வரும் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.