மலைவாழ் மாணாக்களின் சோக படிப்பு! நாற்றம் பிடித்த சூழலில் தான் கற்க வேண்டுமா? சங்க தலைவர் டெல்லிபாபு பேட்டி!

கு.அசோக்,
"ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி"யில் அடிப்படை வசதிகள் இன்றி நாற்றம் பிடித்த சூழலில் மலைவாழ் மக்களின் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மலைவாழ் மாணாக்களின் எதிர்கால நலனுக்காக தீட்டப்பட்ட உன்னதமான திட்டம் தற்போது ஒன்றுக்கும் உதவாமல் கிடக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட, ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக உண்டு உறைவிட பள்ளி நடத்தப்படுகிறது.
அங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட பள்ளிகளில் சுத்தம், சுகாதாரம், உணவு என எந்த அடிப்படை வசதியும் சரியில்லை என்பது குற்றச்சாடு.
குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியில்
மாணவர்கள் உண்டு உறங்கி கல்வி பயில மத்திய அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் மேல் நிலைப்பள்ளியை நிறுவியிருக்கிறது.
இந்த பள்ளியில் 215 மாணவர்கள் மற்றும் 143 மாணவிகள் உள்ள நிலையில் தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகளை திறக்க அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தற்போது108 மாணவர்கள் 76 மாணவிகளை மட்டும் அழைத்து இப் பள்ளியை தொடங்கி உள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்வமுடன் கல்வி பயிலவந்த மாணவ மாணவிகளை நாற்றம் பிடித்த சூழல் தான் வருக வருக என வரவேற்றன.
அந்த அளவுக்கு இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. மாணவ, மாணவிகள் கழிவறை சுத்தமாக இல்லை.
குப்பைகள் கழிவு நீருடன் கலந்து சாக்கடை போல் தேங்கி நிற்பதால் மாணவர்கள் வாந்தி மயக்கம் மற்றும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில்.
இந்த உண்டு உறைவிட பள்ளி எங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளோம்.
ஆனால் எங்களால் உணவு உண்பது, உறங்குவதை கூட ஒழுங்காக செய்ய முடியவில்லை.பின்பு எப்படி எங்களால் கல்வி பயில முடியும். தற்பொழுது உள்ள நோய்த்தொற்று சூழ்நிலையில் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளதுகிறது.
ஆனால் ஒரே அறைக்குள் கும்பல் கும்பலாக நாங்கள் அமர்ந்து உறங்கி கல்வி பயில வேண்டி இருக்கிறது.
கழிவறை, குப்பைகள் கலந்த சாக்கடை நீர் எங்கள் பள்ளி மைதான வளாகத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
உணவு அறைக்குள் செல்லும் பொழுது துர்நாற்றம் வீசுவதால் குமட்டல் ஏற்படுகிறது.
நாங்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளோம், ஆனால் தற்போதைய பள்ளியில் மைதானத்தில் கழிவறை குப்பைகள் கலந்து சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் விளையாடவும் முடியவில்லை.
அதுமட்டுமல்லாது மாணவ மாணவிகளுக்கு என்று தனித்தனி விடுதி இருக்க வேண்டும் ஆனால் இந்தப் பள்ளியில் மாணவ மாணவிகள் ஒரே கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் இங்கு சமையல் ஆட்கள் கூட இல்லை. எங்களை பராமரித்து பாதுகாக்க அலுவலர்கள் இல்லை என்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.டெல்லிபாபு அவர்களிடம் பேசினோம்.
மேற்படி பள்ளியானது தமிழகத்தில் ஏழு இடத்தில் உள்ளது. மத்திய மாநில நிர்வாகங்களின் கீழ் செயல்படும் இந்த பள்ளிகளை மெட்ரிக் பாட முறையில் நடத்தி வருகிறார்கள். நாங்க சி.பி.எஸ்.சி. பாட திட்டத்தின் கீழ் நடத்த வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.
ஏன்னா அப்பதானே மலைவாழ் பிள்ளைகள் மத்திய அளவிளான கல்வித்தரம் பெற்று வேலை வாய்ப்பு பெறமுடியும்.
அதே போல் அடிப்படை வசதியான, குடிநீர், டாய்லெட், போன்றவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் அக்கறையுடன் கவனித்துக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, இதை வெல்ஃபர் தாசில்தார் அவர்கள் நேரடியாக கவனிக்க வேண்டும், ரெகுலர் தாசில்தாரருக்கும் பொறுப்பு உண்டு.
தற்போது ஒன்னரை ஆண்டு கழித்து பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், கழிவறைகளை சீர்படுத்த வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கருதி அறைகளை ஒதுக்க வேண்டும்.
கோவிட் தொற்று ஏதும் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அதே போல் மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் அரிசி உள்ளிட்டவைகள் தரமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், எதற்கும் சப்கலெக்டர் ஒரு முறை இந்த பள்ளியை நேரடியாக ஆய்வு செய்தால் நலம்.
இந்த பள்ளியில் ஏற்பட்டுள்ள அடிப்படை அவலம் குறித்து மாநில பழங்குடியினர் நல இயக்குநர் அவர்களுக்கு உடனடியாக முறையிட்டுள்ளேன், அவர் கவனித்து சீர்படுத்துவதாக கூறியிருக்கிறார் என்று சொன்னார்.