டி ஐ ஜி வரைந்தபெண் குழந்தைகள் தின வாழ்த்து மடல்!

ஜி. எஸ். மேத்யூ ராஜ்,
ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர்முனைவர்.ஜ.ஆனி விஜயா IPS அவர்கள் விழிப்புணர்வு வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
ஓடி விளையாடு பாப்பா ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா !
இந்த உலகமே உன்னை உற்று நோக்குதடி பாப்பா ,
ஒவ்வொரு நொடியும் நீ விழிப்பாயிரு பாப்பா !
உதவும் குணம் வேண்டுமடி பாப்பா ,
உன்னில் நல்ல மனம் வேண்டுமடி பாப்பா !
பேச்சில் உண்மை வேண்டும் பாப்பா ,
நெஞ்சில் பேருறுதி வேண்டுமடி பாப்பா !
உறங்கும் போதும் - ஒருவிழி மூடாதிரு பாப்பா!
தீமைக்கு தீஞ்சினம் கொள்ளடி பாப்பா ,
நீ அஞ்சாமை போர்முறை பழகடி பாப்பா !
எல்லோரும் சமமென்று சொல்லடி பாப்பா ,
ஏற்றத் தாழ்வுகளை கண்டால் - எதிர்த்து நில்லடி பாப்பா !
கல்விதனை கண்ணென்று கருதிவிடு பாப்பா .
கயமை கண்டால் காறி உமிழ்ந்துவிடு பாப்பா !
கடவுள் மீது நம்பிக்கை கொள்ளடி பாப்பா ,
உன் உழைப்பே அந்தக் கடவுளென தன்னம்பிக்கை கொள்ளடி பாப்பா !
உன்னை அன்பு செய்வோரை நீ பேரன்பு செய்யடி பாப்பா !
உன்னை சினப் படுத்துவோர்க்கு உன் சிரிப்பில் கொஞ்சத்தை பரிசளித்துவிடு பாப்பா !
இந்த உலகம் உன்னை போற்றினால் !
செவிடாய் இருந்துவிடு பாப்பா !
இந்த உலகம் உன்னை தூற்றினால் ,
ஊமையாய் கடந்துவிடு பாப்பா !
எந்நிலையிலும் உன்னிலை மாறாதிரு பாப்பா !
உனக்கு நீயே துணை என்ற விதிப்படி :
உன் லட்சியமே நிச்சயமென்பதில் எப்பொழுதும் எள்ளளவும் மாறாதிரு பாப்பா !
ஓடிவிளையாடு பாப்பா .... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! என முனைவர்.ஜ.ஆனி.விஜயா IPS வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.